மகளிர் டி20 உலகக்கோப்பை 2024: ஹர்மன்பிரீத் போராட்டம் வீண்; ஆஸியிடம் வீழ்ந்தது இந்தியா!

Updated: Sun, Oct 13 2024 23:06 IST
Image Source: Google

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரில் எந்த நான்கு அணிகள் அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில் இத்தொடரில் இன்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணிக்கு கிரேஸ் ஹாரிஸ் மற்றும் பெத் மூனி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பெத் மூனி 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜார்ஜியா வெர்ஹாமும் ரேனுகா சிங் பந்துவீச்சில் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்தார். 

இதனையடுத்து கிரேஸ் ஹாரிஸுடன் இணைந்த கேப்டன் தஹ்லியா மெக்ராத் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினார். அதன்பின் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடிய நிலையில் அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டிற்கு 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த தஹ்லியா மெக்ராத் 32 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். 

அவரைத்தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கிரேஸ் ஹாரிஸ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிடடர். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஷ்லே கார்ட்னரும் 6 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த எல்லிஸ் பெர்ரி மற்றும் போஃப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியை சவாலான ஸ்கோரை நோக்கி அழைத்துச் சென்றனர். இதில் அதிரடியாக விளையாடிய எல்லிஸ் பெர்ரி 32 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து அனபெல் சதர்லேண்டும் 10 ரன்களில் நடையைக் கட்டினார். 

இறுதியில் ஆஸ்திரேலிய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 151 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரேனுகா சிங் மற்றும் தீப்தி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ஷஃபாலி வர்மா 20 ரன்களை எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனாவும் விக்கெட்டை இழந்தார். 

பின்னர் களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸும் 16 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனால் இந்திய அணி 47 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் இணைந்த கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். இருவரும் இணைந்து தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளை விளாசியதன் மூலமாக 4ஆவது விக்கெட்டிற்கு 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அசத்தினர். பின்னர் 29 ரன்களில் தீப்தி சர்மா விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷும் ஒரு ரன்னுடன் நடையைக் கட்டினார். 

Also Read: Funding To Save Test Cricket

அதஏசமயம் மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்மன்பிரீத் க்வுர் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ய, இந்திய அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் அரையிறுதிச் சுற்றுக்கும் முன்னேறியுள்ளது. அதேசமயம் இந்திய அணி இத்தோல்வியின் மூலம் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை கடினமாக்கியுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை