அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்!

Updated: Mon, Mar 04 2024 13:13 IST
அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் டெவான் கான்வே; ஐபிஎல் தொடரில் பங்கேற்பது சந்தேகம்! (Image Source: Google)

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அந்த அணிக்கு எதிராக மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி, நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியிலும் அபார வெற்றியைப் பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துவருகிறது. 

இத்தொடரில் நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகினார். டி20 தொடரின் போது விக்கெட் கீப்பிங் செய்து கொண்டிருந்த டெவான் கான்வே காயமடைந்து போட்டியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன்பின் அவருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டது. 

அவரது காயம் குறித்து அந்நாட்டின் கிரிக்கெட் வாரிய மருத்துவர்கள் வெளியிட்ட அறிக்கையில், டெவான் கான்வேவின் காயம் குணமடைய நீண்ட காலம் எடுக்கும் என்பதால், ஓரிரு நாளில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், காயம் குணமடைய 8 வாரங்கள் ஆகலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இச்செய்தியானது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்பெடுத்தியுள்ளது. 

 

ஏனெனில் கடந்த சில சீசன்களாக சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கி வந்த டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் இணைந்து பலமுறை அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்நிலையில் அவர் தற்போது காயம் காரணமாக வரும் மே மாதம் வரை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடமுடியாத சூழலில், சென்னை அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசயம் மற்றொரு நியூசிலாந்து வீரரான ரச்சின் ரவீந்திரா அணியில் இருப்பதால் நிச்சயம் கான்வேவின் இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்கள், 2 அரைசதங்கள் என 578 ரன்களை குவித்தார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ரச்சின் ரவீந்திரா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை