இதுதான் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் - கேதர் ஜாதவ்!

Updated: Sat, Apr 15 2023 20:28 IST
Dhoni Creates An Environment In Such A Manner That Players Confidence Always Remains High, Says Keda (Image Source: Google)

இந்த வருட ஐபிஎல் தொடர் துவங்குவதற்கு முன்பே தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல், இத்துடன் ஓய்வு பெற்றுவிடுவார் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். கடந்த இரண்டு மூன்று சீசன்களாகவே இதே பேச்சுக்கள் அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிலர் இந்த சீசனோடு ஓய்வு பெற்று விடுவார் என்று கூறுகிறார்கள், சிலரோ இல்லை, தோனி இன்னும் முழு உடல்தகுதியுடன் இருக்கிறார் ஓய்வு பெறுவதற்கான அவசியமே இல்லை. காலில் சிறுசிறு பிரச்சனை இருப்பதை சரி செய்து கொண்டால் போதும் என்கிறார்கள்.

தோனியும் அதற்கேற்றார் போலவே பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் கீப்பிங் என அனைத்திலும் கலக்கி வருகிறார். காலில் பிரச்சினை இருப்பது போல எந்த செயலிலும் காட்டிக்கொள்ளவே இல்லை. இந்த சீசன் முழுக்க முழுக்க பினிஷர் ஆக விளையாடுகிறார். இந்நிலையில் தோனி இந்த சீசனோடு கட்டாயம் ஓய்வு பெற்று விடுவார், அடுத்த கேப்டனாக இளம் வீரரை நியமித்து விட்டு செல்வார் என கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் சிஎஸ்கே வீரர் கேதர் ஜாதவ். 

இதுகுறித்து பேசிய அவர், “2000 சதவீதம் அடித்து சொல்கிறேன் தோனிக்கு இதுதான் கடைசி ஐபிஎல். இதோட ஓய்வு பெற்று விடுவார். நன்றாக பேட்டிங் மற்றும் கீப்பிங் செய்து வருகிறார். இருப்பினும் 42 வயதாகிறது அதையும் கருத்தில் கொள்வார் என்று கருதுகிறேன். ஜியோ சினிமாவில் தோனி விளையாடிய போட்டியை அதிகபட்சமாக 2.2 கோடி பேர் பார்த்தனர் என்று கேள்விப்பட்டேன். 

இது இந்த சீசனின் ஆரம்பம் தான். இன்னும் நிறைய பேர் அவரது விளையாட்டை நேரலையில் மற்றும் நேரில் வந்து கண்டுகளிக்க வேண்டும். இனி எவ்வளவு நாட்கள் விளையாடுவார் என்பதே தெரியாது. திடீரென்று அனைத்தையும் நிறுத்திவிட்டு சென்று விடுவார். இதுதான் கடைசி சீசன். அடுத்ததாக கேப்டன் பொறுப்பை ஏற்க இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் தயாராக இருக்கிறார். தோனியும் அவரைத்தான் தேர்வு செய்வார் என்று கருதுகிறேன். 

உள்ளூர் போட்டிகளில் மகாராஷ்டிரா அணியை நன்றாக வழி நடத்துகிறார். சிஎஸ்கே அணியில் பேட்டிங்கிலும் வழிநடத்துகிறார். சிஎஸ்கே அணியில் கேப்டன் பொறுப்பு இவருக்கு கிடைப்பதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் இளம் வயதாக இருக்கிறார். ஆகையால் அடுத்த 5, 10 வருடங்களுக்கு கேப்டனை மாற்ற வேண்டிய அவசியமும் இருக்காது. சிஎஸ்கே அணியின் வரலாறும் அதுதான்” என்று குறிப்பிட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை