எனது வர்ணனையை தோனி பாராட்டினார் - தினேஷ் கார்த்திக்!

Updated: Fri, Mar 03 2023 21:48 IST
Dhoni said he really enjoys my commentary: Dinesh Karthik (Image Source: Google)

இந்திய கிரிக்கெட்டில் தற்போது மிகவும் மூத்த வீரர்களில் முக்கியமானவர் தினேஷ் கார்த்திக். அவர் 18 வருடங்களாக உள்ளே வெளியே என இந்திய கிரிக்கெட் அணி உடன் தொடர்பில் இருந்தவர். நடந்து முடிந்த டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று தற்பொழுது அணிக்கு வெளியில் இருந்தாலும் இன்னும் ஓய்வு அறிவிப்பை வெளியிடாமல் இருக்கிறார். அதே சமயத்தில் தன்னை கிரிக்கெட் வர்ணனையில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு கிரிக்கெட்டில் இன்னொரு பரிணாமத்தில் ஜொலிக்கிறார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கிரிக்கெட் வர்ணனையாளராக பங்கு பெற்று, அதற்கு அடுத்து இந்திய அணி தொடர்ந்து இங்கிலாந்து அணி உடன் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி பலரது பாராட்டை அங்கு பெற்றார்.

அதற்குப் பிறகு கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இவரை ஏலத்தில் வாங்க, ஒரு பினிஷர் ஆக நம்ப முடியாத வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணியிலும் இடம் பிடித்தார். தற்பொழுது அணிக்கு வெளியே இருக்கும் இவர் கிரிக்கெட் வர்ணனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து கூறியுள்ள தினேஷ் கார்த்திக், “எனக்கு ஒரு மிகப்பெரிய பாராட்டு நான் எதிர்பாராத ஒரு நபரிடம் இருந்து கிடைத்தது. அது மகேந்திர சிங் தோனி. அவர் என்னை அழைத்து ‘ நான் உங்கள் கிரிக்கெட் வர்ணனையை மிக மிக ரசித்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது ‘ என்று கூறினார். எனக்கு ஆஹா நன்றி என்று மிகவும் சந்தோசமாக இருந்தது.

வெளிப்படையாக சொல்வதென்றால் அவர் இந்த விளையாட்டை அதிகம் பார்க்கிறார். அதனால் அவரிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. மேலும் அவர் எனது வர்ணனையை ரசித்தது எனக்கு சிறப்பானது. நான் வர்ணனை செய்த சிறிய தருணங்களை மிகவும் ரசிக்கிறேன். மேலும் விளையாட்டு பற்றி பேசுவதை நான் ரசிக்கிறேன். 

நான் விளையாட்டை பகுத்துப் பார்க்கிறேன். அதனால் அதே சமயத்தில் விளையாட்டை பார்க்கும் அனைவருக்கும் அர்த்தமுள்ள ஒன்றை தர விரும்புகிறேன். எனவே சூழ்நிலைகளை நான் என் சொந்த வழியில் புரிந்துகொள்ள எப்போதும் முயற்சி செய்கிறேன். அதை நான் நினைத்த விதத்தில் வெளிப்படுத்த முயற்சியும் செய்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

இந்த மாத இறுதியில் துவங்க உள்ள 16ஆவது ஐபிஎல் சீசனுக்கு பயிற்சி செய்ய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மொத்தமாக சென்னையில் குழுமியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகேந்திர சிங் தோனியின் வருகை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் தொடருக்கு முன்பே ரசிகர்களை பெருமளவில் இழுத்து வந்திருக்கிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை