இந்திய தேர்வு குழுவினரை கடுமையாக விமர்சித்த திலீப் வெங்சர்க்கார்!

Updated: Mon, Jun 19 2023 13:30 IST
Dilip Vengsarkar Slams BCCI Selection Committee's Lack Of Vision (Image Source: Google)

2021ஆம் ஆண்டு கரோனா பரவலின் போது இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, இளம் வீரர்களை கொண்ட இரண்டாம் கட்ட இந்திய அணியினர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அந்த அணிக்கு கேப்டனாக ஷிகர் தவான் செயல்பட்டார். அதனைத் தொடர்ந்து டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே ரோஹித் சர்மா கவனம் செலுத்தி வந்ததால், ஒருநாள் தொடர்களில் இரண்டாம் கட்ட இந்திய அணியே பங்கேற்று வந்தது.

அந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக இருந்து இளம் வீரர்களை வழிநடத்தி வந்தார். ஆனால் அந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயரை தவிர்த்து வேறு எந்த வீரருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், தீபக் சஹர் உள்ளிட்டோருக்கு போதுமான வாய்ப்புகளை இந்திய அணி வழங்கவில்லை. இதனால் அடுத்தக் கட்ட கேப்டனை உருவாக்குவதில் பிசிசிஐ சிரமங்களை சந்தித்து வருகிறது.

ஏனென்றால் ரோஹித் சர்மா, விராட் கோலி, புஜாரா, ரஹானே உள்ளிட்டோர் ஒரே வயதில் விளையாடி வருகின்றனர். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் இளம் வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று கருதினாலும், டெஸ்ட் அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளே வழங்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. ரிஷப் பந்த் மட்டுமே ஒரே வாய்ப்பாக இருக்கிறார். இதனை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் திலீப் வெங்சர்கார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய திலீப் வெங்சர்கார், “இந்திய அணியை தேர்வு செய்த தேர்வுக் குழுவினருக்கு கிரிக்கெட்டை பற்றி அறிவோ, எதிர்காலம் பற்றிய சிந்தனை என்று எதுவும் இல்லாமல் செயல்பட்டுள்ளனர். முக்கிய வீரர்கள் இல்லாமல் ஏராளமான சுற்றுப்பயணங்கள் மேற்கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவானை கேப்டனாக நியமித்துள்ளனர். அதுபோன்ற தொடர்களில் தான் இந்தியாவின் எதிர்கால கேப்டனை உருவாக்க முடியும். அதுதான் சிறந்த வழி. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக எந்த இளம் வீரரையும் கேப்டன்சி செய்யும் அளவிற்கு உருவாக்கவில்லை.

உலகின் பணக்கார கிரிக்கெட் போர்டு என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியில் முக்கிய வீரர்கள் காயமடைந்தால், மாற்று வீரர்கள் யார் தயாராக இருக்கிறார்கள்? ஐபிஎல் மூலமாகவும், தொலைக்காட்சி உரிமம் மூலமாகவும் கோடிகளை குவிப்பது மட்டுமே சாதனையல்ல” என்று இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை