டி20 உலகக் கோப்பை போட்டித் தொடர் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. இதில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களின் பெயரை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் கேஎல் ராகுல் துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் விலகியிருந்த ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. அவருக்கு மாற்றாக அக்ஸர் படேல் அணியில் இடம்பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணியில் தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement

இதில் மாற்றுவீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய், தீபக் சாஹர் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அணியில் சஞ்சு சாம்சன், முஹம்மத் ஷமி இடம்பெறாதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் டி20 உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'கனவு நனவானது' என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். ஐபிஎல் தொடரின்போது டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது தனது 'கனவு' என அடிக்கடி தினேஷ்கார்த்திக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீப காலமாக கிரிக்கெட் உலகில் கம்பேக் நாயகன் என்று வருணிக்கப்படுபவர் டிகே. நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றார் தினேஷ் கார்த்திக்.

கங்குலி தொடங்கி டிராவிட், கும்ப்ளே, தோனி, கோலி, ரோஹித், இப்போது கே.எல்.ராகுல் வரையில் பல கேப்டன்களுக்கு கீழ் விளையாடிய நீண்ட நெடிய அனுபவம் கொண்டவர் தினேஷ் கார்த்திக். நட்சத்திர வீரர்களுக்கு மத்தியில் சிக்கித்தவித்த அவருக்கு இந்திய அணியில் ரெகுலராக இடம் கிடைப்பதே பெரிய சவாலாக இருந்தது. இருந்தாலும் மனம் தளராது அணியில் விளையாடும் வாய்ப்புக்காக முயற்சித்துக் கொண்டே இருந்தார். 

Advertisement

அதற்காக தனக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் எல்லாம் தனது திறனை நிரூபித்து வந்தார். அது உள்ளூர் கிரிக்கெட், உலக கிரிக்கெட் என அவர் வேறுபாடு பார்க்கவில்லை. பல்வேறு பேட்டிங் ஆர்டரில் விளையாடியவர். இப்போது, தினேஷ் கார்த்திக் தன் விடாமுயற்சிக்கான பலனைப் பெற்றுள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News