இந்த வெற்றி எங்கள் அணி வீரர்களையே சாரும் - சஞ்சு சாம்சன்!

Updated: Tue, Apr 23 2024 13:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது திலக் வர்மா, நெஹால் வதேரா ஆகியோரது சிறப்பான பேட்டிங்கின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களைச் சேர்த்த்து. இதில் அதிகபட்சமாக திலக் வர்மா 65 ரன்களையும், நேஹால் வதெரா 49 ரன்களையும் சேர்த்தனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய சந்தீப் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஜோஸ் பட்லர் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அணிக்கு தேவையான அடித்தளத்தையும் அமைத்துக்கொடுத்தனர். இதில் பட்லர் 35 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சனும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுபக்கம் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 104 ரன்களையும், கேப்டன் சஞ்சு சாம்சன் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 38 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன், புள்ளிப்பட்டியலில் தங்களது முதல் இடத்தையும் தக்கவைத்துக்கொண்டது. இப்போட்டியின் ஆட்டநாயகனாக சந்தீப் சர்மா தேர்வு செய்யப்பட்டார். 

இதையடுத்து போட்டி முடிந்து வெற்றிகுறித்து பேசிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், “இந்த போட்டியில் நாங்கள் வெற்றிபெற்றதற்கான அனைத்து வாழ்த்துகளும் எங்கள் அணியின் அனைத்து வீரர்களையுமே சேரும். பந்துவீச்சின் போது பவர்பிளே ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் மிடில் ஓவர்களில் இடது கை வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்திவிட்டனர். ஆனால் நாங்கள் திரும்பி வந்ததுடன் இந்த வெற்றியையும் பதிவுசெய்துள்ளோம்.

நாங்கள் பேட்டிங் செய்ய வரும்போது மைதானம் மெதுவாக இருந்தாலும், விளக்குகளின் வெளிச்சாத்தில் விளையாடும் போது அது பேட்டிங்கிற்கு சாதமாக அமைந்தது. தொழில்முறை வீரர்கள் தங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். மேலும் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்து அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன். அவர் மிகவும் நம்பிக்கையான விரர்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை