ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்! 

Updated: Wed, Oct 11 2023 13:54 IST
ஆஸ்திரேலிய அணி அரையிறுதி வாய்ப்பை விட்டுள்ளனர் - கௌதம் கம்பீர்!  (Image Source: Google)

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் அனைத்து அணிகளும் தங்களுடைய முதல் போட்டியில் விளையாடி முடித்துள்ளன. அதில் 5 கோப்பைகளை வென்று ஏற்கனவே உலகக்கோப்பை வரலாற்றின் வெற்றிகரமான அணியாகவும் அசுரனாகவும் திகழும் ஆஸ்திரேலியா தங்களுடைய முதல் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

சென்னையில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா சுழலுக்கு சாதகமான மைதானத்தில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 200 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. இருப்பினும் அதைத் துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 வீரர்களை ஆரம்பத்திலேயே டக் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியா சிறப்பான துவக்கத்தை பெற்றது.

அதனால் 2/3 மோசமான துவக்கத்தை பெற்ற இந்தியா தோல்வியை சந்திப்பது உறுதி என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக நின்று 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி 85 ரன்களும் கேஎல் ராகுல் 97 ரன்களும் எடுத்து வெற்றி பெற வைத்தனர். அதன் காரணமாக 1996க்குப்பின் முதல் முறையாக ஒரு உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா தோல்வியை பதிவு செய்தது.

அதை விட அந்த போட்டியில் விராட் கோலி ஆரம்பத்திலேயே கொடுத்த கேட்ச்சை மிட்சேல் மார்ஷ் தவற விட்டதே ஆஸ்திரேலியாலின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அப்போட்டியில் ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் தவறவிடவில்லை செமி ஃபைனல் வாய்ப்பையும் தவறு விட்டுள்ளதாக கௌதம் கம்பீர் சரியான கருத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ விராட் கோலியின் கேட்சைப் பிடித்திருந்தால் இந்தியா 10/4 அல்லது 20/4 என மேலும் சரிந்து இன்னும் அதிக அழுத்தத்தை சந்தித்திருக்கும். ஏனெனில் விராட் கோலி போன்ற ஒருவர் இல்லாமல் இந்தியா சேசிங் செய்வது கடினமாக அமைந்திருக்கும். எனவே ஆஸ்திரேலியா கேட்ச்சை மட்டும் விடவில்லை கிட்டத்தட்ட செமி ஃபைனல் வாய்ப்பையும் தவற விட்டுள்ளார்கள். 

உலகக்கோப்பை போன்ற தொடரில் அந்த கேட்ச்சை தவற விட்டதால் ஆஸ்திரேலியா முதல் 4 இடங்களிலிருந்து வெளியேறலாம் மற்றும் அரையிறுதிக்கு வராமல் போகலாம். ஏனெனில் இந்தியாவிடம் தோற்ற காரணத்தால் எஞ்சிய போட்டிகளில் வலுவான அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியா வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை