துலீப் கோப்பை 2024: ஜெகதீசன், ஈஸ்வரன் அரைசதம்; முன்னிலை நோக்கி இந்தியா பி அணி!

Updated: Fri, Sep 13 2024 21:10 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்றைய தினம் இரண்டாவது சுற்று போட்டிகள் தொடங்கியது. அதன்படி இத்தொடரின் நான்காவது லீக் போட்டியில் இந்தியா பி மற்றும் இந்தியா சி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா சி அணியில் இஷான் கிஷான் சதமடித்து அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய பாபா இந்திரஜித் அரைசதம் விளாசினார். 

பின்னர் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 111 ரன்கள் எடுத்த நிலையில் இஷான் கிஷன் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட பாபா இந்திரஜிதும் 78 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய அபிஷேக் போரலும் 12 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மீண்டும் பேட்டிங் செய்ய களமிறங்கினார்.  இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ருதுராஜ் கெய்க்வாட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

இதன்மூலம் இந்தியா சி அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்களைக் குவித்தது. இந்நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களுடனும்,மனவ் சுதர் 8 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்தனர். அதன்பின் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கெய்க்வாட் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த மனவ் சுதர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 82 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதன் காரணமாக இந்திய சி அணி முதல் இன்னிங்ஸில் 525 ரன்களை குவித்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்தியா பி அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் ராகுல் சஹார் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா பி அணிக்கு நாராயண் ஜெகதீசன் - கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அபாரமாக விளையாடியதுடன் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்து அசத்தினர். 

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இந்தியா பி அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 124 ரன்களைக் குவித்துள்ளது. இதில் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 51 ரன்களையும், நாராயண் ஜெகதீசன் 8 பவுண்டரிகளுடன் 67 ரன்களையும் குவித்து களத்தில் உள்ளனர். இதனையடுத்து 401 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்தியா பி அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை