துலீப் கோப்பை 2024: ஷம்ஸ் முலானி அபார பந்துவீச்சி; இந்திய டி அணியை வீழ்த்தியது இந்தியா ஏ!

Updated: Sun, Sep 15 2024 20:06 IST
Image Source: Google

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பாண்டு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்று வரும்  மூன்றாவது லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஷம்ஸ் முலானி, தனூஷ் கோட்டியான் ஆகியோரது அரைசதத்தின் மூலம் முதல் இன்னிக்ஸில் 290 ரன்களைச் சேர்த்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷம்ஸ் முலானி 89 ரன்களையும் தனூஷ் கோட்டியான் 53 ரன்களையும் சேர்த்தனர். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்தியா டி அணியில் நட்சத்திர வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் சிறப்பாக விளையாடியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படிக்கல் 92 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழது பெவிலியன் திரும்பினர். இதனால் இந்தியா டி அணி முதல் இன்னிங்ஸில் 183 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. 

இதனையடுத்து 107 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய ஏ அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் - பிரதாம் சிங் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு தேவையான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதில் 56 ரன்கள் எடுத்த நிலையில் மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். இதில் மற்றொரு தொடக்க வீரரான பிரதாம் சிங் தனது சதத்தைப் பதிவுசெய்த கையோடு 122 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த திலக் வர்மா 111 ரன்களையும், ஷஸ்வாத் ராவத் 64 ரன்களையும் சேர்க்க இந்தியா ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 380 ரன்களைச் சேர்த்து டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதன்மூலம் இந்தியா டி அணிக்கு 488 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்தியா டி அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 62 ரன்களைச் சேர்த்தது. இதையடுத்து இன்று தொடங்கிய கடைசி நாள் ஆட்டத்தை யாஷ் தூபே 15 ரன்களுடனும், ரிக்கி புய் 44 ரன்களுடனும் தொடர்ந்தனர்.

இதில் யாஷ் தூபே 37 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 40 ரன்களிலும், அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன் 3 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 40 ரன்களைச் சேர்த்து நிலையில் விக்கெட்டை இழந்தார். அதேசமயம் மறுபக்கம் அபாரமாக விளையாடி வந்த ரிக்கி பூய் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்திய நிலையில், 113 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

Also Read: Funding To Save Test Cricket

இதனால் இந்தியா டி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 301 ரன்களை எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா ஏ அணி 186 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா டி அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஷம்ஸ் முலானி ஆட்டநாயகன் விருதை வென்றார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை