இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லீட்ஸில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து, 78 ரன்களில் ஆல் அவுட்டானது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களைச் சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணியொல் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களிலும், ஹாசீப் ஹமீத் 68 ரன்களிலும் வெளியேறினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் - ஜோ ரூட் இணை அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இதில் மாலன் 70 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜோ ரூட் சதமடித்து அசத்தினார். இத்தொடரில் ரூட் அடிக்கும் 3ஆவது சதமாகவும் இது அமைந்தது.
அதன்பின் மறுமுனையில் களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ், ஜோஸ் பட்லர், மொயீன் அலி ஆகியோர் வந்தவேகத்திலேயே நடையைக் கட்ட, ஜோ ரூட்டும் 121 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 423 ரன்களை சேர்த்துள்ளது. அந்த அணியில் கிரேக் ஓவர்டன் 24 ரன்களுடனும், ஒல்லி ராபின்சன் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.
Also Read: : சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!
இந்திய அணி தரப்பில் முகமது சமி 3 விக்கெட்டுகளையும், சிராஜ், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதையடுத்து 345 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.