ENG vs IND: ரிஷப், ஷர்துல் அதிரடி; இங்கிலாந்துக்கு 368 ரன்கள் இலக்கு!

Updated: Sun, Sep 05 2021 20:57 IST
ENG vs IND 4th Test: England need 368 runs to win (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 4வது டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 191 ரன்கள் மட்டுமே அடிக்க, இங்கிலாந்து அணி 290 ரன்கள் அடித்தது.

பின் 99 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணிக்கு ரோஹித்தும் ராகுலும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 83 ரன்களை சேர்த்து கொடுத்தனர். அபாரமாக ஆடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு வெளியே தனது முதல் சதத்தையும் டெஸ்ட்டில் தனது 8வது சதத்தையும் பதிவு செய்தார்.

இதையடுத்து கோலியும் ஜடேஜாவும் இணைந்து 3ஆவது நாள் ஆட்டத்தை முடித்தனர். 3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் அடித்திருந்தது. அதன்பின் 4ஆம் நாளான இன்றைய ஆட்டத்தை கோலியும் ஜடேஜாவும் தொடர்ந்தனர். ஜடேஜா 17 ரன்னில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ரஹானே டக் அவுட்டானார்.

அவர்களை தொடர்ந்து கோலியும் 44 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட, 312 ரன்களுக்கு இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்தது. 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட்டும் ஷர்துல் தாகூரும் பொறுப்பை உணர்ந்து கவனமாகவும், அதேவேளையில் அடித்தும் ஆடி ஸ்கோரையும் உயர்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 31 பந்தில் அரைசதம் அடித்த ஷர்துல் தாகூர், இந்த இன்னிங்ஸிலும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஷர்துல் தாகூரும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 7வது விக்கெட்டுக்கு 100 ரன்களை குவித்தனர். அணியின் ஸ்கோர் 412 ரன்களாக இருந்தபோது, ஷர்துல் 60 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ரிஷப் பண்ட்டும் அவரது அரைசதத்தை எட்டிய கையோடு விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் தங்கள் பங்கிற்கு சில பவுண்டரிகளை விளாசினர். 

Also Read: சிட்னி சிக்சர்ஸில் மீண்டும் ஓராண்டு ஒப்பந்தமான பிராத்வைட்!

இதன் மூலம் இந்திய அணி 466 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இருப்பினும் இங்கிலாந்து அணிக்கு இலக்காக 368 ரன்களை நியமித்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மொயீன் அலி, ஒல்லி ராபின்சன் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை