ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணியாக உள்ளனர் - ஜோஸ் பட்லர்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தாலும், மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் சதமடித்து அசத்தியதுடன் 112 ரன்களைச் சேர்த்தார்.
அவருக்கு துணையாக விளையாடிய விராட் கோலி 52 ரன்களையும், ஸ்ரேயாஸ் ஐயர் 78 ரன்களையும், கேஎல் ராகுல் 40 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 356 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித் 4 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் அபாரமாக இருந்தது.
அந்த அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 34 ரன்களையும், பில் சால்ட் 23 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய வீரர்களில் டாம் பான்டன் 38 ரன்களையும், கஸ் அட்கின்சன் 38 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் இங்கிலாந்து அணி 214 ரன்களில் ஆல் அவுட்டானதுடன், 142 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
இப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து பேசிய இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர், “இந்த முழு சுற்றுப்பயணத்திலும் எங்கள் அணியின் பேட்டிங் பெரிதளவில் எடுபடவில்லை. அவர்களின் சொந்த நிலைமைகளில் நாங்கள் ஒரு நல்ல அணியை எதிர்கொண்டோம். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர்கள்தான் சிறந்த அணியாக உள்ளனர். நாங்கள் ஒரு அருமையான அணியால் தோற்கடிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த மூன்று போட்டிகளில் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தவோ அல்லது முடிவுகளைத் திணிக்கவோ போதுமானதாக இல்லாத சில தருணங்களை நாங்கள் போட்டிகளில் அனுபவித்திருக்கிறோம். பேட்டிங்கில் எங்கள் அணுகுமுறை சரியானது, ஆனால் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. இப்போட்டியில் அவர் சிறந்த ஸ்கோரை எங்களுக்கு இலக்காக கொடுத்தனர். ஷுப்மான் ஒரு சிறந்த இன்னிங்ஸை விளையாடினார்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் நாங்கள் இப்போட்டியில் மீண்டும் ஒரு சிறப்பான தொடக்கத்தைப் பெற்றிருந்தோம். ஆனால் அதன் பிறகு பேட்டிங்கில் மீண்டும் சோபிக்க தவறிவிட்டோம். அதனால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அனைத்து வீரர்களும் நம்பிக்கையுடன் விளையாட வேண்டும். ஏனெனில் வீரர்களிடம் அனைத்து ஷாட்களும் உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.