சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் - பிரண்டன் மெக்கல்லம்!

Updated: Wed, Jan 31 2024 14:42 IST
சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் - பிரண்டன் மெக்கல்லம்! (Image Source: Google)

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயாணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே இந்திய அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளதால், அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் இப்போட்டியில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் சுழற்பந்துவீச்சுக்கு இந்தியாவில் உள்ள மைதானங்கள் சாதகமாக இருக்கும் என்பதால் இங்கிலாந்து அணி அதிகபடியான சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக டாம் ஹாட்ர்லி, சோயப் பஷீர் உள்ளிட்ட அறிமுக வீரர்களுக்கும் இத்தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்திய அணிக்கெதிரான முதல் போட்டியில் விளையாடிய டாம் ஹார்ட்லி 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

இதனால் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இங்கிலாந்து அணி சுழற்பந்துவீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணிக்கெதிராக நாங்கள் சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்க பயப்பட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானதாக இருந்தால் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் அடங்கிய இங்கிலாந்து அணியுடன் களமிறங்கவும் நாங்கள் பயம் கொள்ளமாட்டோம். சோயிப் பஷீர் எங்களுடன் அபு தாபி பயிற்சி முகாமில் பயிற்சி மேற்கொண்டார். அவரது திறமை எங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அவர் அணியில் இடம்பெற்று விளையாடுவதற்குத் தயாராக இருக்கிறார்.

மேலும், ஒரு சில முதல்தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய டாம் ஹார்ட்லி அறிமுக போட்டியிலேயே சிறப்பாக பந்துவீசி எங்களுக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். ஹைதராபாத் வெற்றியின் மூலம் எங்கள் வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இது ஒரு நீண்ட தொடர் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் எங்களுக்கு சில வேலைகள் உள்ளன. இந்தியா வலுவாக மீண்டு வரும். இருப்பினும் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை