ENG vs PAK, 4th T20I: பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது இங்கிலாந்து!

Updated: Fri, May 31 2024 12:26 IST
Image Source: Google

பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியானது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் நடைபெற இருந்த மூன்றாவது டி20 போட்டியும் மழை காரணமாக முழுவதுமாக கைவிடப்பட்டது.

இதையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டி20 போட்டியானது நேற்று லண்டனில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்த பாகிஸ்தன் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் ஆசாம் - முகமது ரிஸ்வான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். 

தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்களைச் சேர்த்தது. இப்போட்டியில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசாம் 36 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து 23 ரன்கள் சேர்த்த நிலையில் முகமது ரிஸ்வானும் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய உஸ்மான் கான் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

ஆனால் மறுபக்கம் களமிறங்கிய ஃபகர் ஸமான், சதாப் கான், அசாம் கான் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் உஸ்மான் கான் 38 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, பின்னர் களமிறங்கிய இஃப்திகாரும் 21 ரன்களிலும், நசீம் ஷா 16 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் 19.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் ஜோஸ் பட்லர் - பில் சால்ட் இணை தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இப்போட்டியில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும் சிக்ஸர்களையும் விளாச, இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

இப்போட்டியில் அரைசதத்தை நெருங்கிய பில் சால்ட் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 45 ரன்களிலும், கேப்டன் ஜோஸ் பட்லர் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 39 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். பின்னர் களமிறங்கிய வில் ஜேக்ஸும் 20 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஜானி பேர்ஸ்டோவ் - ஹாரி ப்ரூக் இணை ஜோடி சேர்ந்தனர். 

இதில் இருவரும் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஜானி பேர்ஸ்டோவ் 28 ரன்களையும், ஹாரி ப்ரூக் 17 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை