இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்கோப்பை தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறுகிறது. இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில் காயம் காரணமாக இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்ரவுண்டர் சாம் கரண் விலகுவதாக அறிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் சாம் கரண், ராஜஸ்தான் அணிக்கெதிரான போட்டியின் போது முதுகு பகுதியில் காயமடைந்தார்.
இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இன்னும் ஓரிரு தினங்களில் இங்கிலாந்து செல்லவுள்ளார்.
மேலும் சிகிச்சை முடிந்து அவரால் உலகக்கோப்பை தொடருக்குள் தயாராக முடியாத சூழலினால், அவர் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதையடுத்து சாம் கரணிற்கு பதிலாக டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் அவரது சகோதரர் டாம் கரண் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.