BAN vs IND, 2nd ODI: ரோஹித், தீபக் சஹாருக்கு காயம்; தொடரிலிருந்து விலகலா?

Updated: Wed, Dec 07 2022 17:46 IST
Image Source: Google

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கடந்த  05ஆம் நடந்த முதலாவது ஒரு போட்டியில் வங்கதேச அணி இந்தியாவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால், தொடரில் வங்கதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இந்தியா – வங்கதேச அணிகள் மோதும் 2ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று பகல் 11:30 மணி முதல் தாக்கா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்குள் 271 ரன்கள் எடுத்துள்ளது.

வங்கதேச அணி தரப்பில் அதிகபட்சமாக சதம் விளாசிய மெஹிதி ஹசன் மிராஸ் 100 ரன்களும், அரைசதம் அடித்த மஹ்முதுல்லா 77 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் உம்ரான் மாலிக் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 272 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த ஆட்டத்தின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித்த் சர்மாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தற்போது மருத்துவக் குழு கண்காணிப்பில் இருக்கிறார் என்றும், அவரை ஸ்கேன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

இந்த போட்டியில் 2ஆவது ஓவரை சிராஜ் வீசினார். அப்போது கேப்டன் ரோஹித் ஸ்லிப் பகுதியில் ஃபீல்டிங் செய்து கொண்டிருந்தார். தொடக்க வீரரான அனாமுல் ஹக், ஸ்லிப் பக்கம் கேட்ச் அடிக்கவே அதை ரோகித் நழுவ விட்டார். அப்போது அவரின் பெரு விரலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, உடனடியாக ஓய்வறைக்குத் திரும்பினார் ரோஹித். தற்போது பிசிசிஐயின் மருத்துவக் குழு அவரை கண்காணித்து வருகிறது. மேலும், உடனடியாக ஸ்கேன் பரிசோதனைக்கு செயப்பட்டுள்ளது என்றும் பிசிசிஐ தகவல் வெளியிட்டுள்ளது.

“இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது கட்டை விரலில் அடிபட்டார். பிசிசிஐ மருத்துவக் குழு அவரை மதிப்பீடு செய்தது. தற்போது ஸ்கேன் பரிசோதனைக்கு சென்றுள்ளார்,” என்று பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதேசமயம் இப்போட்டியில் மூன்று ஓவர்களை மட்டுமே வீசிய தீபக் சஹார் தசைப்பிடிப்பு காரணமாக மேற்கொண்டு ஓவர்கள் வீச களத்திற்கு வரவில்லை. இதனால் அவரது காயம் குறித்த தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளிவராத நிலையில், அவரும் மேற்கொண்டு இத்தொடரில் விளையாடுவாரா என்ர சந்தேகம் எழுந்துள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை