உலகக்கோப்பையை வெல்லும் நாள் வெகுதூரத்தில் இல்லை - தீப்தி சர்மா!

Updated: Sun, Oct 16 2022 10:21 IST
Focusing on the areas to bowl, working on batting helped me in Women's Asia Cup: Deepti Sharma (Image Source: Google)

எட்டாவது மகளிர் பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் நடைபெற்றது. இதில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் 6 முறை சாம்பியனான இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிக ரன்கள் குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கும் வியூகத்துடன் களமிறங்கிய இலங்கை, சற்றும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். 

இதனால் இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக இனோகா ரணவீரா 18 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் ரேணுகா சிங் 3 விக்கெட் கைப்பற்றினார். ராஜேஸ்வரி, சினேஹ ராணா தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 66 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்தியா, 8.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டியது. ஸ்மிருதி மந்தனா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ரன்கள் (நாட் அவுட்) குவித்தார். இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. 

இதன்மூலம் ஏழாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பையை வென்றுள்ளது. இப்போட்டியில் சிறந்த வீராங்கனையாக ரேணுகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேசமயம் தொடரின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. மேலும் 7ஆவது முறையாக ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில், ஆசிய கோப்பை வெற்றி குறித்து பேசிய தீப்தி சர்மா, “அணியின் ஒட்டுமொத்த கூட்டு முயற்சியால் ஆசிய கோப்பையை வெல்ல முடிந்தது. தற்போதைய நிலையில் இந்தியா உலக கோப்பையை வெல்லும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என தெரிவித்தார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை