மாரடைப்பால் கலமான பிரபல கிரிக்கெட் நடுவர்!
சர்வதேச எலைட் நடுவராக இருந்த ஆசத் ரவுஃப் உலகம் முழுவதும் பல்வேறு ரசிகர்களை கொண்டுள்ளார். ஆசத் ரவுஃப், 2000ஆம் ஆண்டில் தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் நடுவராக இருந்தார். சுமார் 16 ஆண்டுகளாக ஆசத் ரவுஃப் நடவராக பணியாற்றினார். '
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 64 டெஸ்ட் போட்டி, 139 ஒருநாள் போட்டி, 28 டி20 போட்டியில் ஆசத் ரவுஃப் நடுவராக பணியாற்றினார். கடந்த 2013ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் நடைபெற்ற சூதாட்ட புகாரில் ஆசத் ரவுஃப் முக்கிய குற்றவாளியாக மும்பை போலீசாரில் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, ஐபிஎல் தொடர் முடிவதற்குள்ளே ஆசத் ரவுஃப் தனது நாட்டிற்கு சென்றுவிட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையிலும் நடுவராக ஆசத் ரவுஃப் அறிவிக்கப்பட்டார். ஆனால், அதில் பங்கேற்காமல் வெளியறினார். அதன் பிறகு ஐசிசி எலைட் நடுவர்கள் பிரிவிலிருந்து ஆசத் ரவுஃப் நீக்கப்பட்டார். தாம் எவ்வித சூதாட்டத்தில் தொடர்பில்லை என்று கூறிய ஆசத் ரவுஃப், விசாரணைக்கு ஒத்துழைப்பதாக அறிவித்தார்.
ஆனால், ஆசத் ரவுஃப் குற்றவாளி என அறிவித்த பிசிசிஐ, அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிய ஆசத் ரவுஃப், லாகூரில் செருப்பு மற்றும் ஷூ கடையை நடத்தி வந்தார். அண்மையில் கூட அவர் ஷூ விற்பனையாளராக கஷ்டப்படும் காட்சிகள் வெளியானது.
இந்த நிலையில், நேற்று கடையை மூடிவிட்டு வீடு சென்ற ஆசத் ரவுஃப்க்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். ஆசத் ரவுஃப் மறைவுக்கு ரசிகர்களும், கிரிக்கெட் உலகமும் இரங்கலை தெரிவித்து வருகிறது, ஆசத் ரவுஃப் நடுவராக பணியாற்றுவதற்கு முன்பு, பாகிஸ்தான் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி கொண்டு இருந்தார். அதில் 71 போட்டியில் விளையாடி சராசரி 28ஆக வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.