இங்கிலாந்தில் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் வரும் ஜூன் 7 – 11ஆம் தேதி வரை 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் இறுதி போட்டி நடைபெறுகிறது. வரலாற்றின் 2ஆவது டெஸ்ட் சாம்பியனை தீர்மானிக்கும் அப்போட்டியில் ஆஸ்திரேலியா – இந்தியா மோதுகின்றன. அதில் கடந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் விராட் கோலி தலைமையில் நழுவ விட்ட கோப்பையை இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement

முன்னதாக இப்போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் பெரும்பாலும் ஸ்விங் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்பதால் சுழலுக்கு சாதகமான மைதானங்களில் விளையாட பழகிய இந்திய அணியினர் தடுமாற்றமாக செயல்படுவது வழக்கமாகும். எனவே முன்கூட்டியே பயணித்து அங்குள்ள கால சூழ்நிலைகளுக்கு தங்களை உட்படுத்திக் கொண்டு தேவையான பயிற்சிகளை எடுத்து தயாராக களமிறங்குவதே இங்கிலாந்தில் வெற்றி காண்பதற்கான வழியாகும்.

Advertisement

அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த முறை 2 மாதம் முன்னதாகவே இங்கிலாந்துக்கு பயணித்து இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 – 0 (2) என்ற கணக்கில் வெற்றி பெற்ற கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து முழுமையாக தயாராகி இறுதிப்போட்டியில் களமிறங்கியது. மறுபுறம் 10 நாட்கள் முன்பாக பயணித்து வலைப்பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு நேரடியாக இறுதிப்போட்டியில் களமிறங்கிய விராட் கோலி தலைமையிலான இந்தியா தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இம்முறையும் ஐபிஎல் தொடர் நடைபெற்றதால் 10 நாட்களுக்கு முன்பாக மட்டுமே இந்திய அணியினர் இங்கிலாந்து சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக இறுதிப்போட்டியில் விளையாடிய ரஹானே, ஜடேஜா ஆகியோர் நேற்று தான் இங்கிலாந்து சென்றனர். அப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த 2 மாதங்களாக இங்கிலாந்தின் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி அங்குள்ள தற்போதைய சூழ்நிலைகளை பற்றி நன்கு தெரிந்துள்ள புஜாராவிடம் தேவையான ஆலோசனைகளை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியினர் கேட்டு தெரிந்துகொள்ள வேண்டுமேன சுனில் கவாஸ்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நீண்ட காலமாக இங்கிலாந்தில் புஜாரா இருந்து வருவதால் ஓவல் மைதானத்தில் இருக்கும் பிட்ச் எப்படி இருக்கும் என்பதை பற்றிய தெளிவு அவரிடம் இருக்கும். அவர் ஓவல் மைதானத்தில் விளையாடாமல் இருந்திருக்கலாம். ஆனால் சசக்ஸ் அணி விளையாடும் மைதானம் லண்டனுக்கு வெகு தொலைவில் இல்லை. எனவே இந்திய அணியின் பேட்டிங் துறையை பொறுத்த வரை புஜாராவின் உள்ளீடுகள் இந்த ஃபைனலில் மதிப்பெற்றதாக இருக்கும். அதே போல் கேப்டன்ஷிப் அம்சத்திலும் அவருடைய ஆலோசனைகளை பின்பற்றலாம்.

ஏனெனில் கவுண்டி தொடரில் அவர் கேப்டனாக செயல்பட்டார் என்பதை மறக்க வேண்டாம். குறிப்பாக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்துடன் இணைந்து செயல்பட்ட புஜாரா அவர் எப்படி செயல்பட்டார், எப்படி அவுட்டாக்கலாம் என்பது போன்ற தெளிவைக் கொண்டிருப்பார்” என்று கூறினார். அத்துடன் பெரும்பாலான இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடியதால் அதிரடியாக விளையாடுவதற்காக தற்சமயத்தில் பேட்டை அதிவேகமாக சுழற்றும் டெக்னிக்கை கொண்டிருப்பார்கள்.

Advertisement

இந்திய வீரர்கள் தங்களுடைய பேட் வேகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் நேரடியாக டி20 கிரிக்கெட்டில் இருந்து வரும் அவர்களுடைய பேட்டின் வேகம் தற்போது வேகமாக இருக்கும். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் பேட்டின் வேகம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் குறைவாக இருக்க வேண்டும். எனவே அந்த விஷயத்தில் ஃபைனலுக்கு முன்பாக இந்திய வீரர்கள் பயிற்சிகளை எடுத்து தயாராக வேண்டும்” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News