பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி - விராட் கோலி!

Updated: Sun, Nov 05 2023 20:10 IST
பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சி - விராட் கோலி! (Image Source: Google)

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 37ஆவது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 121 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சதம் விளாசிய விராட் கோலி பிறந்த நாளில் சதம் அடித்ததோடு மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய சச்சின் டெண்டுல்கரின் 49 சதங்கள் சாதனையையும் இன்று சமம் செய்தார். கடந்த போட்டியிலேயே சதத்தை நெருங்கி அதனை தவற விட்ட விராட் கோலி இம்முறை சதம் அடித்தது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தான் பிறந்த நாளில் அடித்த இந்த 49ஆவது சதம் குறித்து பேசிய விராட் கோலி, “இந்த மைதானம் பேட்டிங் செய்ய சற்று சவாலாக இருந்தது. ஆனாலும் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மன் கில் மிகச் சிறப்பான தொடக்கத்தை அளித்ததால் அந்த மொமென்ட்டத்தை அப்படியே கொண்டு செல்ல வேண்டும் என்று நான் நினைத்தேன். அதோடு தொடக்க ஓவர்கள் கடந்து மிடில் ஓவர்களின் போது பந்து சற்று நின்று திரும்பி வந்தது. 

மேலும் 10 ஓவர்களுக்கு பிறகு பந்து மிகவும் மெதுவாக ஆனதால் நான் இறுதிவரை சற்று கவனத்துடன் விளையாட எண்ணினேன். அப்படி நான் விளையாடும் போது டீம் மேனேஜ்மென்டிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் நான் இந்த போட்டியை இறுதிவரை நின்று விளையாட வேண்டும் என்றும் என்னை சுற்றி மற்ற வீரர்கள் விளையாடுவார்கள் என்றும் எனக்கு அவர்கள் செய்தி அனுப்பி இருந்தனர்.

அதன்படியே நான் இறுதிவரை நிற்க வேண்டும் என்று ஒருபுறம் நிலைத்து நின்று விளையாடினேன். மற்றொருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பை தொடரின் போதே நான் மூன்றாவது இடத்திலும், அவர் நான்காவது இடத்திலும் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டதால் எங்களுக்கு இடையேயான பார்ட்னர்ஷிப் அற்புதமாக இருந்தது. ஹார்டிக் பாண்டியா இந்த தொடரில் இல்லை என்பதால் ஒன்று இரண்டு விக்கெட்டுகளை விட்டால் கூட அது எங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே போட்டியில் கடைசிவரை நான் நிற்க வேண்டும் என்று நினைத்தே இந்த சதத்தையும் அடித்துள்ளேன். இப்படி எனக்கு இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு அளித்த கடவுளுக்கு நன்றி. பிறந்தநாளில் இவ்வளவு ரசிகர்கள் கூட்டம் மத்தியில் நான் சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மைதானம் ஸ்லோவாக இருப்பதினால் நிச்சயம் எங்களது பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்டுகளை எடுத்து தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்துவார்கள்” என கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை