லக்னோ மைதானத்தை கடுமையாக விமர்சித்த கௌதம் கம்பீர்!

Updated: Mon, Jan 30 2023 19:23 IST
GroundGautam Gambhir and Hardik Pandya slam Lucknow Ekana pitch after India vs NZ game sees no six (Image Source: Google)

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், இரண்டாவது டி20 போட்டி லக்னோவில் நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணியும், பேட்டிங்கில் கடுமயாக திணறி, கடும் முயற்சிக்கு பிறகு கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், இரு அணிகளுமே 100 ரன்கள் எடுப்பதற்கு மிக கடுமையாக திணறியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதே போல் முன்னாள் வீரர்கள் பலரும் இந்தியா நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டி.20 போட்டி குறித்தான தங்களது கருத்துக்களை ஓபனாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியா நியூசிலாந்து இடையேயான போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான் கௌதம் கம்பீர், இரண்டாவது போட்டிக்கான ஆடுகளத்தை மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய கௌதம் கம்பீர், “ஆடுகளத்தின் தன்மை மிக மிக மோசமானதாக இருந்தது, சர்வதேச போட்டிகளில் இது போன்று நடைபெறுவது ஏற்புடையது அல்ல. ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் டி காக் இந்த ஆடுகளத்தை பற்றி தெரிந்தால் ஐபிஎல் தொடரையே புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளது, அந்த அளவிற்கு ஆடுகளம் மிக மோசமானதாக இருந்தது.

யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாதது ஏன் என இப்பொழுதும் எனக்கும் புரியவில்லை. இதற்கு என்ன பதில் சொல்வது என்று கூட எனக்கு தெரியவில்லை. ஆடுகளத்தின் தன்மை சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போதிலும், ஹர்திக் பாண்டியா யுஸ்வேந்திர சாஹலை சரியாக பயன்படுத்தாமல் தீபக் ஹூடாவிற்கு 4 ஓவர்கள் கொடுத்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 

இது தவறான முடிவு. அர்ஸ்தீப் சிங், சிவம் மாவி போன்ற இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் ஆடுகளத்தின் தன்மை சூழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருந்த போது, யுஸ்வேந்திர சாஹல் போன்ற ஒருவரை சரியாக பயன்படுத்தாது ஏற்புடையது அல்ல” என்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை