ENG vs SL, 2nd Test: இலங்கையை 196 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!

Updated: Sat, Aug 31 2024 09:12 IST
Image Source: Google

இலங்கை அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியின் முடிவில் இங்கிலாந்து அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வெற்றிபெற்று அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணியானது இந்த டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது ஆகஸ்ட் 29 லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தனஞ்ஜெயா டி சில்வா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த் இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தை கஸ் அட்கின்சன் 74 ரன்களுடனும், மேத்யூ போட்ஸ் 20 ரன்களுடனும் தொடர்ந்தனர். இதில் தொடர்ந்து அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய கஸ் அட்கின்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுமுனையில் மேத்யூ போட்ஸ் 21 ரன்னிலும், கஸ் அட்கின்சன் 118 ரன்களிலும், ஒல்லி ஸ்டோன் 15 ரன்னிலும் என விகெட்டை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்சில் 102 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 427 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 143 ரன், கஸ் அட்கின்சன் 118 ரன்கள் எடுத்தனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்ணாண்டோ 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கி விளையாடிய இலங்கை அணியானது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் நிஷன் மதுஷ்கா, திமுத் கருணரத்னே ஆகியோர் தலா 7 ரன்களுக்கும், பதும் நிஷங்கா 12 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்களிலும், கேப்டன் தனஞ்செயா டி சில்வா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினேஷ் சண்டிமாலும் 23 ரன்களிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனைத்தொடர்ந்து களமிறங்கிய கமிந்து மெண்டிஸ் ஒருபக்கம் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் தனது அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார். ஆனால் மறுபக்கம் களமிறங்கிய மிலன் ரத்நாயக்க 19 ரன்களிலும், பிரபாத் ஜெயசூர்யா 8 ரன்களிலும், லஹிரு குமாரா ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். 

இறுதியில் அரைசதம் கடந்ததுடன் 8 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 74 ரன்களை எடுத்திருந்த கமிந்து மெண்டிஸும் தனது விக்கெட்டை இழந்தார். இதனால இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 55.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 196 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஒல்லி ஸ்டோன், மேத்யூ பாட்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு டேனியல் லாரன்ஸ் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். 

இதில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் டேனியல் லாரன்ஸ் தனது விக்கெட்டை இழந்தார். பின்னர் டக்கெட்டுடன் இணைந்த கேப்டன் ஒல்லி போப் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன்மூலம் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணியானது ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் பென் டக்கெட் 15 ரன்களுடனும், ஒல்லி போப் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் லஹிரு குமாரா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதனையடுத்து 256 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை