இந்தியாவுக்கு எதிராக சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது - டோனி டி ஸோர்ஸி! 

Updated: Wed, Dec 20 2023 14:08 IST
இந்தியாவுக்கு எதிராக சதமடித்தது மகிழ்ச்சியளிக்கிறது - டோனி டி ஸோர்ஸி!  (Image Source: Google)

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது ஒருநால் போட்டி ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்சன் 62 ரன்களும், கேஎல் ராகுல் 56 ரன்களும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் குவிக்காமல் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறியதால் 46.2 ஓவரில் 211 ரன்கள் எடுத்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தென் ஆப்ரிக்கா அணி தரப்பில் அதிகபட்சமாக பர்கர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அதன்பின் 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்தி களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான ஹென்ரிக்ஸ் 52 ரன்களும், இறுதி வரை ஆட்டமிழக்காமல் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய டோனி டி ஸோர்ஸி 119 ரன்களும், மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய வாண்டர் டூசன் 36 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 42.3 ஓவரில் இலக்கை மிக இலகுவாக எட்டிய தென் ஆப்பிரிக்கா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு ஒருநாள் கிரிக்கெட்டில் தம்முடைய முதல் சதமடித்து அசத்திய இளம் தென் ஆப்பிரிக்க வீரர் டோனி டீ ஸோர்ஸி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் தம்மால் சர்வதேச அளவில் அசத்த முடியாது என்று விமர்சித்தவர்களின் கருத்தை பொய்யாக்கி இந்தியாவை தோற்கடித்ததை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர்,“உண்மையாக இந்த சமயத்தில் வெள்ளம் போல உணர்ச்சிகள் வருகிறது. இந்த சமயத்தில் முதலாவதாக என்னுடைய அம்மாவை பற்றி நினைக்கிறேன். அவர் வேலைக்கு சென்று விட்டு இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பார். எனது திறமை பற்றி நிறைய பேர் சந்தேகப்பட்டார்கள். அவர்களை தற்போது பொய்யாக்கியதை நினைத்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பயிற்சியாளர்கள் ராப் மற்றும் ஜேபி டுமினி ஆகியோர் டாப் ஆர்டரில் நான் எப்படி விளையாட வேண்டும் என்று எதிர்பார்ப்பதை என்னிடம் சொன்னார்கள்.

முதல் போட்டியிலும் இதே போல சிறப்பாக விளையாட விரும்பினேன். தற்போது நான் பல்வேறு சூழ்நிலைகளில் என்னை உட்படுத்திக் கொள்ள துவங்கி விட்டேன் என்று நினைக்கிறேன். இப்போதும் நான் என்னுடைய ஆட்டத்தில் சில முன்னேற்றங்களை காண வேண்டும். இந்தியாவுக்கு எதிராக சதமடித்த இந்தப் போட்டியில் மைதானத்தில் இருந்த அனைவரும் எனக்கு கை தட்டினார்கள். இது போன்ற தருணத்தை மறக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை