அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன் -ஹர்பஜன் சிங்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியிlல் தொடக்க வீரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் பிரைடன் கார்ஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் அரைசதம் கடந்த நிலையில் மற்ற வீரர்கள் சோபிக்க தவறியதால், அந்த அணி 10.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ரன்களில் ஆல் அவுட்டானது.
இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் அதிரடியாக விளையாடி 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் என 135 ரன்களைக் குவித்ததுடன், பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், அபிஷேக் சர்மா தனது பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “அபிஷேக் இன்னும் கொஞ்சம் பந்து வீசுவதைப் பார்க்க விரும்புகிறேன். அவர் ஒரு சிறந்த பந்து வீச்சாளர். அவரது தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் நான் அவரைப் பார்த்தபோது, அவரது சீம் நிலை சிறப்பாக இருந்தது என்பதைக் கவனித்தேன்.
இருப்பினும், அவர் தனது பேட்டிங்கில் செய்யும் அளவுக்கு தனது பந்துவீச்சில் அதிக முயற்சி எடுப்பதில்லை. அவர் என்னைச் சந்திக்கும் ஒவ்வொரு முறையும், நான் அவருக்கு - இப்போதும் கூட - முதலில் அவரது பந்துவீச்சைப் பற்றிப் பேச வேண்டும் என்பதை நினைவூட்டுவேன். பேட்டிங் அவரது முதல் காதல், அவர் தொடர்ந்து அதில் சிறந்து விளங்குவார். ஆனால் அவர் நிச்சயமாக தனது பந்துவீச்சில் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.
Also Read: Funding To Save Test Cricket
ஒரு நல்ல இடது கை சுழற்பந்து வீச்சாளருக்குரிய அனைத்து குணங்களையும் அவர் கொண்டுள்ளார். பேட்டிங்கைப் பொறுத்தவரையில் அவர் தொடக்கத்திலிருந்தே பயமில்லாமல் விளையாடி வருகிறார். பந்து வீச்சாளரின் நற்பெயரைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை, பந்து அவரது ஆர்க்கில் இருந்தால், அவர் ஷாட்டுக்குச் செல்கிறார். அவர் இயல்பாகவே அச்சமற்றவர், நான் அவரை மேம்படுத்த உதவ முடிந்தால், நான் எப்போதும் தயாராக இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.