யுவராஜ் சிங் சாதனையை சமன் செய்த ஹர்திக் பாண்டியா!

Updated: Fri, Jul 08 2022 16:37 IST
Hardik Pandya becomes first Indian to achieve THIS feat (Image Source: Google)

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் இந்தியா பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று சௌதாம்ப்டனில் நடைபெற்றது. 

இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் அரைசதத்தின் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிர்கு 198 ரன்களைச் சேர்த்தது. 

அதை தொடர்ந்து 199 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  148 ரன்களுக்குச் சுருண்டது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் மற்றும் அர்ஷிதீப் சிங் தலா 2 விக்கெட்களை எடுத்தனர். அவர்களை விட அனலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் மிரட்டலாக பேட்டிங் செய்து 55 ரன்கள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 

கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஆல்-ரவுண்டராக உருவெடுத்த இவர் 2019 உலக கோப்பைக்கு பின்பாக காயத்தால் பந்துவீச முடியாமல் பேட்டிங்கிலும் சுமாராகவே செயல்பட்டார்.

இருப்பினும் 2021 டி20 உலக கோப்பையில் தேர்வு செய்யப்பட்ட நிலைமையில் பந்து வீசாமல் சுமாராக பேட்டிங் செய்ததால் கடுப்பான தேர்வுகுழு இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கியது. அதற்காக மனம் தளராத அவர் கடுமையாக உழைத்து சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக செயல்பட்டு அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று அதே தேர்வுகுழுவினர் தாமாக முன்வந்து தேர்வு செய்யும் அளவுக்கு மாஸ் கம்பேக் கொடுத்தார்.

இருப்பினும் ஐபிஎல் தொடரில் மட்டும் சிறப்பாக செயல்படுவார் நாட்டுக்காக என்றால் சுமாராக செயல்படுவார் என்ற பரவலான விமர்சனம் இவர் மீது நிலவுகிறது. ஆனால் தென் ஆப்ரிக்க தொடரில் அற்புதமாக பேட்டிங் செய்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய அவர் சமீபத்தில் அயர்லாந்து தொடரில் 2 – 0 என்ற கணக்கில் கேப்டனாக கோப்பையை வென்று நாட்டுக்காகவும் சிறப்பாக செயல்படுவேன் என்று நிரூபித்துக் காட்டினார்.

அந்த வரிசையில் இப்போட்டியில் பந்துவீச்சில் மாலன், ராய், லிவிங்ஸ்டன், சாம் கரண் என்ற 4 முக்கிய பேட்ஸ்மேன்களை சாய்த்ததுடன், பேட்டிங்கிலும் அற்புதமாக செயல்பட்டு இந்தியாவுக்கு மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3+ விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமன் செய்துள்ளார்.

கடந்த 2009இல் இலங்கைக்கு எதிராக நடந்த டி20 போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்த யுவராஜ் சிங் அந்த அணி நிர்ணயித்த 207 ரன்கள் இலக்கைத் துரத்தும் போது 60* (25) ரன்களைக் குவித்து இந்தியாவுக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கொடுத்தார். அவருக்குப்பின் 12 வருடங்கள் கழித்து இப்போதுதான் அது போன்ற ஒரு அற்புதமான ஆல்-ரவுண்டர் செயல்பாட்டை ஹர்திக் பாண்டியா வெளிப்படுத்தி சாதனை படைத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை