தென் ஆப்பிரிக்காவை தனது சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் எதிர்கொண்டுவரும் இந்தியா முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து திணறி வருகிறது. டெல்லியில் துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் 212 ரன்களை அசால்டாக சேஸிங் செய்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா நேற்று கட்டாக் நகரில் நடைபெற்ற 2ஆவது போட்டியிலும் 149 ரன்கள் இலக்கை எளிதாக சேஸிங் செய்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

Advertisement

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 148/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 40 (35) இஷான் கிசான் 34 (21) தினேஷ் கார்த்திக் 30* (21) ரன்களை எடுத்தனர். அதை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு ஹென்றிக்ஸ் 4, பிரிட்டோரியஸ் 4, வேன் டெர் டுஷன் 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை புவனேஸ்வர் குமார் காலி செய்து இந்தியாவுக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார். 

Advertisement

ஆனால் குயின்டன் டி காக்க்கு பதில் முதல் முறையாக விளையாடிய ஹென்றிச் க்ளாசென் மிடில் ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து 7 பவுண்டரி 5 சிக்சருடன் 81 (46) ரன்கள் எடுத்து வெற்றியை எளிதாக்கினார். அவருடன் கேப்டன் பவுமா 35 (30) டேவிட் மில்லர் 20* (15) ரன்கள் எடுத்ததால் 18.2 ஓவரிலேயே 149/6 ரன்களை எடுத்த தென் ஆப்பிரிக்கா 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2 – 0* (5) என வலுவான முன்னிலை பெற்று கோப்பையை வெல்லும் வாய்ப்பை பிரகாசப் படுத்தியுள்ளது.

மறுபுறம் கேப்டன் ரோஹித் சர்மா இல்லாத சமயத்தில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய அணியினர் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் முக்கிய தருணங்களில் சொதப்பி சொந்த மண்ணில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்துள்ளனர். குறிப்பாக கேஎல் ராகுல் விலகியதால் திடீரென கேப்டனாக அறிவிக்கப்பட்ட அனுபவமில்லாத ரிஷப் பந்த் அந்த பொறுப்பின்றி பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டு வருகிறார்.

அதைவிட எந்த சமயத்தில் எந்த பந்து வீச்சாளரை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற ஒரு கேப்டன் எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளில் சொதப்பும் அவரின் சுமாரான கேப்டன்ஷிப் இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்து வருகிறது. எடுத்துக்காட்டாக முதல் போட்டியில் ஒருசில ஓவர்களில் அதிக ரன்களை வழங்கினார் என்பதற்காக சஹாலுக்கு முழுமையான 4 ஓவர்கள் வழங்காதது, 2ஆவது போட்டியில் 3 ஓவர்களை சிறப்பாக பந்துவீசியும் ஆவேஷ் கானுக்கு 4ஆவது ஓவரை வழங்காதது போன்றவற்றை கூறலாம்.

முன்னதாக இந்த தொடருக்கு கேப்டனாக அறிவிக்கப்பட்ட கேஎல் ராகுல் கடைசி நேரத்தில் காயத்தால் விலகிய நிலையில் கேப்டன்ஷிப் அனுபவம் கொஞ்சம் கூட இல்லாத போதிலும் ஆல்-ரவுண்டராகவும் அணியை சிறப்பாகவும் வழிநடத்தி ஐபிஎல் 2022 கோப்பையை வென்று காட்டிய ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிக்கப்படாதது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது. 

Advertisement

இந்த நிலைமையில் கேஎல் ராகுல் காயத்தால் விலகாமல் இருந்திருந்தாலும் தென் ஆப்பிரிக்க தொடருக்கு ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்காமல் இந்தியா தவறு செய்துவிட்டதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், “இந்த டி20 அணிக்கு ராகுலை காட்டிலும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அவர் தனது தகுதியை ஐபிஎல் தொடரில் நிரூபித்துள்ளார். அவர் கடினமான தருணங்களிலும் தனது அணி திரும்ப வேண்டும் என்று நினைக்கக்கூடியவர். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பேட்டிங் அல்லது பௌலிங் ஆகியவற்றால் அவர் நல்ல முடிவை காட்ட விரும்புவார். அதேபோல் முதல் போட்டியில் கடைசி ஓவர்களில் வந்து முதல் பந்திலிருருந்தே பவுண்டரிகளை அடித்தார். 

அதை அனைவராலும் செய்ய முடியாது. அதேப்போல ஆரம்பத்தில் விக்கெட் சரிந்தாலும் அதை ஈடுசெய்ய முன்கூட்டியே களமிறங்குவார். அவர் உலகிலேயே டி20 கிரிக்கெட்டில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரராக தற்போது திகழ்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News