SL vs IND: ஒருநாள் தொடரில் இருந்து தனிப்பட்ட காரணங்களால் விலகும் ஹர்திக் பாண்டியா? - தகவல்!
ஷுப்மன் கில் தலைமையிலான இளம் வீரர்களை உள்ளடக்கிய இந்திய அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இத்தொடரின் முடிவில் இந்திய அணியானது 4-1 என்ற கணக்கில் டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. இதனையடுத்து இந்திய அணியானது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ஜூலை 27ஆம் தேதி முதல் ஜீலை 30ஆம் தேதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 07ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளன. மேற்கொண்டு இத்தொடருக்கான இந்திய அணியும் இன்றைய தினம் அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இத்தொடரில் இருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பதவியேற்கவுள்ளார்.
மேலும் இத்தொடரில் இருந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகினர். இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுலும், டி20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்படவுள்ளதாக புதிய தகவல் வெளியானது.
இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடிய கையோடு அவர் நாடு திரும்புவார் என்றும், அதனால் ஒருநாள் அணியில் தன்னை சேர்க்க வேண்டாம் என்றும் ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
இது தவிர இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கௌதம் கம்பீர், அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரிடமும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட வேண்டும் என்று கோரியுள்ளதாக பிசிசிஐயுடன் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
ஏனெனில் இத்தொடருக்கு பிறகு இந்திய அணி தங்களது அடுத்த ஒருநாள் தொடரை விளையாட நீண்ட காலம் ஓய்வு கிடைக்கும் என்ற காரணத்தை கூறி கம்பீர் இந்த கோரிக்கையை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கெனவே அணியின் மூத்த வீரர்கள் தொடரிலிருந்து ஓய்வளிக்க கோரியுள்ள நிலையில், தற்சமயம் அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவும் ஒருநாள் தொடரிலிருந்து விலகவுள்ளதாக வெளியாகிய தகவல் இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.