நான் நேசிப்பவர்கள் முன்பு சதமடித்தது மகிழ்ச்சி - விராட் கோலி!
மும்பை வான்கடே மைதானத்தில் உலகக் கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 397 ரன்களை எடுத்து அசத்தியது.
அதிகபட்சமாக விராட் கோலி 117 ரன்களைக் குவித்தார். இது அவரின் 50ஆவது சதமாகும். இதுவரை சச்சினின் 49 சதமே கிரிக்கெட் வரலாற்றில் தனிநபரின் அதிகபட்ச சாதனையாக இருந்தது. இன்று விராட் கோலி அச்சாதனையை முறியடித்து சச்சின் டெண்டுல்கருக்கு இந்த சதத்தை சமர்ப்பணம் செய்தார்.
இந்த நிலையில் சதம் அடித்தது குறித்து பேசிய விராட் கோலி, “கொல்கத்தாவிலும் சொன்னேன் ஒரு பெரிய மனிதர் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது. அதே பெரிய மனிதர் சச்சின் என்னை வாழ்த்தினார். இதெல்லாம் விவரிக்க முடியாத உணர்வாக இருக்கிறது. இன்று மீண்டும் ஒரு பெரிய ஆட்டம்.
அணியில் உள்ள மற்ற வீரர்கள் வந்து அவர்களை வெளிப்படுத்தி விளையாடுவதற்கு, நான் ஒரு முனையில் நின்று விளையாட வேண்டி இருந்ததை மீண்டும் ஒருமுறை செய்திருக்கிறேன். எல்லாமே மிக நேர்த்தியாக வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.இந்த போட்டியில் எனக்கு ஒரு ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் எனது திறமைக்கு ஏற்றவாறு நான் விளையாட முயற்சிக்கிறேன். நான் நின்று ஆழமாக போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும்.
இதனால் என்னை சுற்றி இருப்பவர்கள் அவர்கள் இயல்பில் விளையாட முடியும். அதேபோல் நானும் இறுதிக்கட்ட ஓவர்களில் அதிரடியாக விளையாடுவேன். நான் சதம் அடித்த பொழுது ஸ்டாண்டில் சச்சின் இருந்தார். என் மனைவியும் அங்கு இருந்தார். ரசிகர்கள் இருக்கிறார்கள். இதை விளக்குவது மிகவும் கடினம். எனது ஹீரோ, நான் நேசிக்கும் நபர், ரசிகர்கள் என எல்லாம் அந்த நேரத்தில் இருந்தது ஆச்சரியமான ஒன்று” என்று கூறியுள்ளார்.