மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்!

Updated: Tue, Dec 26 2023 20:05 IST
மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறேன் - ஷிகர் தவான் உருக்கம்! (Image Source: Google)

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்தவர் ஷிகர் தவான். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய ஆவரேஜ் 40 ஆக இருந்த பொழுதே, இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஐபிஎல் தொடரில் வருடம் தோறும் குறைந்தது 400 ரன்களுக்கு மேல் எடுத்துக் கொண்டிருந்த பொழுதே, இந்திய டி20 கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டபட்டார்.

அதைவிட இந்திய மண்ணில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஷிகர் தவான் விளையாடுவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில், அவருடைய கேப்டன்ஷியில் அணிக்குள் நுழைக்கப்பட்ட ஷுப்மன் கில்லை எடுத்து, இவரை வெளியே அனுப்பி சோகமான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

இந்நிலையில், அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை போன்று அவரது சொந்த வாழ்க்கையும் அமைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த விவாகரத்து ஆன ஒரு பெண்ணை அவர் மணம் முடித்திருந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிலையில் அவருடன் சில காரணங்களால் விலகி வந்துவிட்ட ஷிகர் தவான் விவாகரத்து பெற்றுக் கொண்டார்.

இப்படியான நிலையில்தான் அவர் தன்னுடைய மகனை சந்திக்க முடியாத நிலையில் ஒரு வருடமாக இருந்து வருகிறார். மேலும் கடைசி மூன்று மாதமாக தன் மகனை சந்திப்பதற்கான எல்லா வழியிலும் தான் தடுக்கப்பட்டு இருப்பதாக, அவருடைய மகனின் இன்றைய பிறந்தநாள் வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஷிகர் தவான் தனது இன்ஸ்டாகிராம் பதிவில்,  “நான் உன்னை நேரில் பார்த்து ஒரு வருடம் ஆகிறது. இப்போது கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக நான் எல்லா வழிகளிலும் தடுக்கப்பட்டிருக்கிறேன். ஆகையால் என் மகனே உனக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உன்னை என்னால் நேரடியாக தொடர்பு கொள்ள முடியாவிட்டாலும், டெலிபதி மூலமாக தொடர்பு கொள்கிறேன். 

 

நான் உன்னை பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன். நீங்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் நன்றாக வளர்ந்து வருகிறீர்கள் என்பது எனக்குத் தெரியும். அப்பா உன்னை எப்பொழுதும் மிஸ் செய்கிறேன், நேசிக்கிறேன். கடவுளின் அருளால் நாம் மீண்டும் சந்திக்கும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கிறேன். குறும்புத்தனமாகவும் அதே நேரத்தில் ஆபத்து எதுவும் இல்லாமலும் இருங்கள். 

பணிவாகவும், பொறுமையாகவும் மேலும் வலிமையாகவும் இருங்கள். உங்களை நான் பார்க்க விட்டாலும், உங்களுடைய அன்றாட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டு, மேலும் நான் என்ன செய்கிறேன் என்றும், தினமும் நான் செய்தியாக எழுதி வைத்து வருகிறேன். உங்களை நான் மிகவும் நேசிக்கிறேன் மகனே” என்று வருத்தமாக பதிவுசெய்துள்ளார். இந்நிலையில் இவரது பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை