இந்த தோல்விக்கான பொறுப்பை நான் ஏற்கிறேன் - ரியான் பராக்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபற்ற 36ஆவது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்ய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது ஐடன் மார்க்ரம், ஆயூஷ் பதோனி ஆகியோரின் அரைசதம் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 66 ரன்களையும், ஆயூஷ் பதோனி 50 ரன்களையும் சேர்க்க, அப்துல் சமத் 30 ரன்களைச் சேர்த்து அணிக்கு ஃபினிஷிங்கை கொடுத்தார். ராஜஸ்தான் அணி தரப்பில் வநிந்து ஹசரங்கா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இளம் வீரர்கள் வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74 ரன்களையும், ரியான் பராக் 39 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில், 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் அதிர்ச்சி தோல்வியைத் தழுவியது.
இந்நிலையில் இந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணி கேப்டன் ரியான் பராக், “உணர்ச்சிகளை அடக்கிக் கொள்வது கொஞ்சம் கடினமாக இருக்கிறது, என்ன தவறு செய்தோம் என்று தெரியவில்லை. 18-19ஆவது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். 19ஆவது ஓவரில் நான் ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும், அதனால் இந்த தோல்விக்கு நான் என்னையே குறை கூறுகிறேன். பந்துவீச்சில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம்.
Also Read: Funding To Save Test Cricket
ஆனால் கடைசி ஓவர் துரதிர்ஷ்டவசமானது. ஏனெனில் நாங்கள் அவர்களை 165-170க்கு நிறுத்துவோம் என்று நினைத்தோம். சந்தீப் சர்மா மிகவும் திறமையான பந்துவீச்சாளர். எனக்கு தெரிந்து அவர் அந்த ஒரு ஓவரில் மட்டுமே மோசமாக இருந்தார். அதேசமய்ம் அப்துல் சமத் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்தார். இருப்பினும் நாங்கள் இந்த இலக்கை துரத்தியிருக்க வேண்டும். ஒரு பந்தினால் கூட உங்களால் ஐபிஎல் போட்டியை இழக்க நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.