ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பம் முதலே பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் இந்தியாவின் நட்சத்திரம் விராட் கோலி சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவிற்காகவும் ஐபிஎல் தொடரிலும் ரன் மெஷினாக எதிரணிகளைப் பந்தாடி பல சாதனைகளைப் படைத்து வந்த அவர் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்திருந்தார். 

Advertisement

ஆனால் அதன்பின் அவரின் பேட்டிங்கில் ஏற்பட்ட இமாலய சரிவிலிருந்து இதுவரை மீள முடியாமல் தவிக்கும் அவர் இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் ஐபிஎல் தொடரிலும் வகித்த கேப்டன்ஷிப் பொறுப்பு தமது ஆட்டத்தை பாதித்ததாக உணர்ந்த காரணத்தால் அந்த பதவிகளிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி கடந்த ஜனவரி மாதம் மொத்தமாக முழுக்கு போட்டார்.

Advertisement

அத்துடன் உலக கோப்பையையும் ஐபிஎல் கோப்பையை வாங்கி தர முடியவில்லை என்ற விமர்சனத்தாலும் பாதிக்கப்பட்ட அவர் அதற்கும் முற்றுப்புள்ளி வைத்ததால் சுதந்திரப் பறவையாக விளையாடி சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் தடுமாறிய அவர் வரலாற்றிலேயே முதல் முறையாக இந்த வருட ஐபிஎல் தொடரில் ஒரே சீசனில் 3 கோல்டன் டக் அவுட்டாகி படுமோசமான பார்மில் சிக்கியுள்ளார்.

குறிப்பாக 2019க்கு பின் டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என 100 போட்டிகளுக்கு மேலாக 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் தவிக்கும் அவரின் ஆட்டத்திலும் உடலிலும் சோர்வையும் முகத்தில் வலி நிறைந்த சிரிப்பையும் பார்த்த ரவி சாஸ்திரி போன்ற முன்னாள் வீரர்கள் இதிலிருந்து வெளிவர 2 – 3 மாதங்கள் தற்காலிக ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் பார்முக்கு திரும்புமாறு அவருக்கு கோரிக்கை வைத்தனர். 

இருப்பினும் தொடர்ந்து விளையாடினால் தானே பார்முக்கு திரும்ப முடியும் என்ற வகையில் விமர்சனங்களுக்கு பின்வாங்காமல் விளையாடி வரும் அவர் நேற்றைய குஜராத்துக்கு எதிரான பெங்களூருவின் வாழ்வா – சாவா போட்டியில் 73 (54) ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இதனால் ஓரளவு ஃபார்முக்கு திரும்பியுள்ள அவருக்கு ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் ஓய்வளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் இந்த மோசமான ஃபார்ம் பற்றியும் 2 – 3 மாதங்கள் ஓய்வு எடுக்குமாறு 2017 – 2021 வரை கேப்டனாக இருந்த தம்முடன் பயிற்சியாளராக செயல்பட்ட ரவிசாஸ்திரி கேட்டு கொண்டதற்கும் விராட் கோலி பதிலளித்துள்ளார்.

Advertisement

அது பற்றி ஸ்டார் ஸ்போர்ட் தொலைக்காட்சியில் பேசிய அவர் “பிரேக் எடுக்குமாறு நிறைய பேர் கூறவில்லை. என் மீது அக்கறை உள்ள ரவிசாஸ்திரி மட்டுமே குறிப்பிட்டிருந்தார். அதற்கு காரணம் கடந்த 6 – 7 வருடங்களாக எனது அருகில் இருந்து எனது சூழ்நிலைகளை அவர் பார்த்தவர். கடந்த 10 – 11 வருடங்களாக இந்தியாவிற்காக 3 வகையான கிரிக்கெட், ஐபிஎல் என நிற்காமல் தொடர்ச்சியாக மிகப்பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடியதில் நிறைய ஏற்றத்தாழ்வுகள் இருந்தன. இதற்கிடையில் 7 வருடங்கள் கேப்டனாகவும் செயல்பட்டேன்

அந்த வகையில் ஓய்வு என்பது அவசியமாகும். ஏனெனில் எதையுமே 100% தயாராக இல்லாமல் செய்யக் கூடாது என்று நான் நம்புபவன். எனவே ஓய்வு எடுக்க வேண்டும் ஆனால் எப்போது ஓய்வு எடுக்க வேண்டும் என்பது நான் வெளிப்படையாக முடிவெடுக்க வேண்டிய ஒன்று. ஆனால் அது ஒரு ஆரோக்கிய சம்பந்தப்பட்ட முடிவு என்பதால் சில நேரங்களை ஒதுக்கி உடலளவிலும் மனதளவிலும் புத்துணர்ச்சி பெறுவதே ஓய்வாகும். 

தொடர்ச்சியாக கிரிக்கெட்டில் விளையாடி ஃபிட்டாக இருப்பதால் உடலளவில் ஓய்வு தேவைப் படவில்லை. ஆனால் மனதளவில் ஒரு விஷயத்தை செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்துக்குள் உங்களை நுழைத்து கொள்ளாமல் அவ்வப்போது ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்

Advertisement

ரன்கள் வரும்போது எனக்கு நானே தன்னம்பிக்கை பெற்றுக் கொள்வேன் என்று தெரியும். நான் இந்தியாவிற்காக ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அதுவே லட்சியம். தற்போது ஓய்வு மற்றும் வேலைக்கிடையே சம நிலையை ஏற்படுத்தி புத்துணர்ச்சியுடன் விளையாட முயற்சித்து வருகிறேன். 

ஒருமுறை அந்த மனநிலையில் வந்து விட்டால் அதன்பின் திரும்பி பார்க்க வேண்டியதில்லை. எனவே என்னுடைய முதன்மையான இலக்கு இந்தியாவிற்காக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பையை வெல்ல வேண்டும். அதற்காக எதையும் செய்வதற்கு நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News