ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஸ்ரேயாஸ், ரச்சின், டஃபி ஆகியோர் பரிந்துரை!
கடந்த மாதம் ஐசிசி ஆடவர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணியானது சாம்பியன் பட்டத்தை வென்று சாதனைப் படைத்தது.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலானது ஒவ்வொரு மாதமும் சிறப்பாக விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. இது ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் இரண்டுக்கும் தனித்தனியே வழங்கப்படுகிறது. இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனை யார் என்ற பரிந்துரை பட்டியலை ஐசிசி இன்று அறிவித்துள்ளது.
அதன்படி ஆடவருக்கான சிறந்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். இதில் நடந்து முடிந்த சாம்பியன் ஸ்கோப்பை தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயர் ரன்களைக் குவித்ததுடன், இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்வதிலும் மிக முக்கிய பங்கினை வகித்தார்.
அதேபோல் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து சதங்களை பதிவுசெய்ததுடன், நியூசிலாந்து அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். மேற்கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரில் ஜேக்கப் டஃபி அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன், தரவரிசையிலும் முதலிடத்திற்கு முன்னேறியதன் மூலம் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
அதேபோல் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இதில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத் மகளிர் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீராங்கனைகள் அனபெல் சதர்லேண்ட் பேட்டிங் மற்றும் பந்துவீச்சிலும், ஜார்ஜியா வொல் பேட்டிங்கிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இப்பட்டியலில் இணைந்துள்ளனர். இதில் வாக்கெடுப்பின் அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.