அண்டர் 19 உலகக்கோப்பை: உகாண்டாவை ஊதித்தள்ளியது இந்தியா!

Updated: Sun, Jan 23 2022 11:28 IST
ICC U19 CWC 2022 - India Beat Uganda By 326 Runs (Image Source: Google)

அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் உகாண்டா அணியை எதிர்கொண்டது.

கரோனா பாதிக்கப்பட்டு 6 இந்திய வீரர்கள் தனிமையில் உள்ள நிலையில் எஞ்சிய வீரர்களை வைத்து இந்திய அணி இப்போட்டியில் களமிறங்கியது

இதில் டாஸ் வென்ற உகாண்டா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதனையடுத்து தொடக்க வீரராக ஹர்னூர் சிங் , அங்கிரிஷ் ஆகியோர் களமிறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 40 ரன்கள் சேர்த்தது. ஹர்னூர் சிங் 15 ரன்களில் ஆட்டமிழக்க,கேப்டன் நிஷாந்த் 15 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த ஆங்கிரிஷ், ராஜ் பவா ஜோடி, உகாண்டா பந்துவீச்சை மைதானத்தின் அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டனர். இவர்களது அதிரடியால் ஸ்கோர் ராக்கெட் வேகத்துக்கு உயர்ந்தது.

குறிப்பாக 23ஆவது ஓவரில் இந்த ஜோடி 2 பவுண்டரி, 2 சிக்சர் என 20 ரன்களை குவித்தது. அங்கிரிஷ் 92 பந்துகளில் சதம் விளாச, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ராஜ் பவா, 69 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் அண்டர்19 உலகக் கோப்பையில் அதிவேக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றார்

அதன்பின் அங்கிரிஷ் 144 ரன்களில் ஆட்டமிழக்க, ராஜ் பவா 101 பந்துகளில் 150 ரன்கள் விளாசினார். இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் சேர்த்தது. ராஜ் பவா 108 பந்துகளில் 162 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் அண்டர் 19 உலகக் கோப்பையில் இந்திய வீரரின் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராகவும் இது அமைந்தது.

அதன்பின் 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணி பேட்ஸ்மேன்கள் இந்திய பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர். கேப்டன் நிஷாந்த் 4 விக்கெட்டுகளை வீழ்த்த, அந்த அணி 19.4வது ஓவரில் 79 ரன்களில் சுருண்டது. 

இதன் மூலம் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் உகாண்டா அணியை வீழ்த்தி இமாலய வெற்றியைப் பதிவுசெய்தது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய ராஜ் பாவா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை