இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக்கை!

Updated: Wed, Jan 24 2024 13:34 IST
இங்கிலாந்து பாஸ்பாலை விளையாடினால் ஆட்டத்தின் முடிவும் இப்படி தான் இருக்கும் - முகமது சிராஜ் எச்சரிக் (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் சில தினங்களாகவே தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இத்தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியளில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனிப்பட்ட காரணங்களினால் இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலிருந்து விலகினாலும், ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், அஸ்வின், ஜடேஜா, பும்ரா போன்ற வீரர்கள் இருப்பது அணிக்கு உத்வேகமளிக்கும் என நம்பப்படுகிறது. அதேசமயம் மறுபக்கம் டெஸ்ட் கிரிக்கெட்டை அதிரடியாக விளையாடும் பாஸ்பால் எனும் அணுகுமுறையை இங்கிலாந்து அணி கடைபிடித்து வருவதால், அவர்களின் இந்த அணுகுமுறை இந்தியாவில் எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. 

இந்நிலையில், இந்தியாவில் இங்கிலாந்து அணி பாஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் டெஸ்ட் போட்டி ஒன்றரை அல்லது இரண்டு நாள்களுக்குள் முடிவடைந்துவிடும் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இந்திய ஆடுகளத்தில் இங்கிலாந்து பாஸ்பால் அணுகுமுறையைப் பின்பற்றினால் நிச்சயம் டெஸ்ட் போட்டி ஒன்றரை அல்லது இரண்டு நாள்களுக்குள் முடிந்துவிடும். ஏனனில் இங்கு ஒவ்வொரு பந்தையும் அடிப்பது எளிதல்ல, ஏனெனில் பந்து சில சமயங்களில் சுழலும், சில சமயங்களில் நேராக செல்லும்.

எனவே, இங்கு பாஸ்பாலை பார்ப்பது கடினமாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் அவர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தால் அது எங்களுக்கு சாதகமாக அமைவதுடன், போட்டியும் சீக்கிரமாகவே முடிந்துவிடும். முன்னதாக அவர்களின் இந்திய சுற்றுப்பயணமும் சீக்கிரமாகவே முடிவடைந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த டெஸ்ட் தொடரில் நான் இரண்டு போட்டிகளில் விளையாடினேன் என்று நினைக்கிறேன். அதில் ஒரு இன்னிங்ஸில் நான் 5 ஓவர்களை வீசி முடிப்பதற்குள்ளாகவே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோரது விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தேன். 

எனவே, நான் எத்தனை ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இப்போது எனது நோக்கமாக உள்ளது. அதில் நான் விக்கெட்டுகளை எடுத்தால் அது நல்லது தான். ஆனாலும் நான தொடர்ந்து சிறப்பான பந்துகளை வீசி பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தை உருவாக்க வேண்டும். ஹைதராபாத்தில் உள்ள எங்கள் ரசிகர்கள் அனைவரும் இப்போட்டியை காண வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். ஏனேனில் நாங்கள் அவர்களை மிகவும் நேசிக்கிறோம் மற்றும் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை