மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்!

Updated: Sat, Feb 17 2024 11:05 IST
மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகிய அஸ்வின்! (Image Source: Google)

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்களைச் சேர்த்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்களைச் சேர்த்தது. 

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் அவசர அவசரமாக அணியிலிருந்து விலகி வீடு திரும்பியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிக்கையில், “குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மருத்துவ அவசரம் காரணமாக ரவிசந்திரன் அஸ்வின் டெஸ்ட் அணியில் இருந்து வலிகியுள்ளார். இந்த சவாலான நேரத்தில், பிசிசிஐ மற்றும் அணியின் முழு ஒத்துழைப்பு அஸ்வினுக்கு உள்ளது," என குறிப்பிட்டிருந்தது. 

 

இதனால் அஸ்வின் குடும்பத்தினருக்கு என்னாயிற்று என்ற தேடல் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. அப்போது பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா தனது எக்ஸ் தளத்தில், "ரவிசந்திரன் அஸ்வினின் தாயார் விரைந்து குணமடைய வேண்டுகிறேன். தனது தாயாருடன் இருப்பதற்காக அவர் ராஜ்கோட் டெஸ்டில் இருந்து விலகி அவசர அவசரமாக சென்னை விரைந்துள்ளார்" என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். 

 

முன்னதாக இங்கிலாந்துகு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸாக் கிரௌலியின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது 500ஆவது விக்கெட்டை பதிவுசெய்தார். இதன்மூலம் அதிகவேகமாக 500 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் மற்றும் இந்திய அணிக்காக டெஸ்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் எனும் சதனைகளை அஸ்வின் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை