இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றநிலையில், தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் நடந்தது. 

Advertisement

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வுசெய்தார். இந்திய அணியில் ரிஷப் பந்திற்கு பதிலாக இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டார்.

Advertisement

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு காமரூன் க்ரீன் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். புவனேஷ்வர் குமார், பும்ரா, அக்ஸர் படேல் ஆகியோரின் பவுலிங்கை பவர்ப்ளேயில் அடித்து நொறுக்கிய கேமரூன் க்ரீன் 19 பந்தில் அரைசதம் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரும் கேப்டனுமான ஆரோன் ஃபின்ச் 7 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேமரூன் க்ரீன் 21 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்களை விளாசி புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

கேமரூன் க்ரீனின் அதிரடியான பேட்டிங்கால்  ஆஸ்திரேலிய அணி பவர்ப்ளேயில் 66 ரன்களை குவித்தது. ஆனால் மிடில் ஓவர்களில் யுஸ்வேந்திர சாஹல், ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகியோர் ரன்களைக் கட்டுப்படுத்த,சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளும் விழுந்தன.

ஸ்மித் 9, மேக்ஸ்வெல் 6, மேத்யூ வேட் 1, ஆகிய மூவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, ஜோஷ் இங்லிஸ் ஓரளவிற்கு நன்றாக விளையாடி 24 ரன்கள் பங்களிப்பு செய்தார்.  டிம் டேவிட்  டெத் ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் ஆடி 25 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு துணையாக டேனியல் சாம்ஸும் 20 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

கேமரூன் க்ரீனின் அதிரடியான தொடக்கம் மற்றும் டிம் டேவிட்டின் அதிரடியான ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 186 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி, 187 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.

Advertisement

இதையடுத்து இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் வகையில் கேஎல் ராகுல் ஒரு ரன்னிலும், கேப்டன் ரோஹித் சர்மா 17 ரன்களிலும் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் இணைந்து 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையில் சேர்த்தனர். 

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்திருந்த சூர்யகுமார் யாதவ் 69 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலியும் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

இறுதியில் 63 ரன்களைச் சேர்த்திருந்த விராட் கோலி ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இறுதியில் ஹர்திக் பாண்டியா பவுண்டரி விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் 19.5 ஓவர்களில் இந்திய அணி இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவு செய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News