IND vs AUS, 3rd T20I: ருதுராஜ் கெய்க்வாட் மிரட்டல் சதம்; ஆஸிக்கு 223 டார்கெட்!

Updated: Tue, Nov 28 2023 20:45 IST
Image Source: Google

உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதி வருகின்றன. அதன்படி, கடந்த நவம்பர் 24ஆம் தேதி  விசாகபட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் வெற்றி பெற்றது.

அதேபோல், நவம்பர் 26  நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று கௌகாத்தியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ருதுராஜ் கெய்வாட் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் ஜெய்ஸ்வால் 6 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷான் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இதையடுத்து ருதுராஜ் கெய்வாட்டுடன் இணைந்த கேப்டன் சூர்யகுமார் யாதம் தொடக்கத்தில் தடுமாறினாலும் பின்னர் வழக்கம்போல் தனது அதிரடியைக் கட்டினார். 

இப்போட்டியில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 39 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் அதிரடி காட்டத்தொடங்கிய ருதுராஜ் கெய்வாட் 32 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதன்பின் தொடர்ந்து பவுண்டரியும் சிக்சர்களுமாக விளாசித்தள்ளிய ருதுராஜ் கெய்க்வாட் 52 பந்துகளில் தனது முதல் சர்வதேச டி20 சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார்.

அதன்பின்னும் அதிரடி காட்டிய ருதுராஜ் கெய்க்வாட் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 57 பந்துகளில் 13 பவுண்டரி, 7 சிக்சர்கள் என 123 ரன்களையும், திலக் வர்மா 31 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 222 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்கவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை