இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளின் முடிவிலும் இந்திய அணியானது வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனையடுத்து இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டி இன்று (ஜனவரி 28) நடைபெற்றது. 

Advertisement

ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் பில் சால்ட் 5 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த பென் டக்கெட் மற்றும் ஜோஸ் பட்லர் இணை பொறுப்புடன் விளையாடி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அடுத்தடுத்து பவுண்டரிகளையும் விளாசி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதன்மூலம் இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 75 ரன்களைத் தாண்டியது.

Advertisement

அதன்பின் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 24 ரன்களைச் சேர்த்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்து அசத்திய பென் டக்கெட் 28 பந்துகளில் 7 பவுண்டரி 2 சிக்ஸர்கள் என 51 ரன்களைச் சேர்த்த கையோடு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோன் ஒருபக்கம் பொறுப்புடன் விளையாட, மறுபக்கம் களமிறங்கிய ஹாரி ப்ரூக் 8 ரன்னிலும், ஜேமி ஸ்மித் 6 ரன்னிலும், ஜே ஓவர்டன் ரன்கள் ஏதுமின்றியும், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் இங்கிலாந்து அணி 127 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்த லியாம் லிவிங்ஸ்டோன் அடுத்தடுத்து சிக்ஸர்களை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். அதன்பின் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்கள் என 43 ரன்களை எடுத்த நிலையில் லிவிங்ஸ்டோனும் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதனையத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த ஆதில் ரஷித் மற்றும் மார்க் வுட் இணை நிதானமாக விளையாடி அணியை சவாலான இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆதில் ரஷித் 10 ரன்களையும், மார்க் வுட் 10 ரன்களையும் சேர்க்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 5 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு இப்போட்டியிலும் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. 

அணியின் தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன் 3 ரன்னிலும், அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 5 பவுண்டரிகளுடன் 24 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து இந்த தொடரில் அபாரமான ஃபார்மில் இருந்த திலக் வர்மாவும் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

Advertisement

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா ஒருபக்கம் நிதானமாக விளையாட மறுமுனையில் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 6 ரன்னிலும், அக்ஸர் படேல் 15 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இந்திய அணி வெற்றிக்கு கடைசி 12 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது 40 ரன்களைச் சேர்த்து களத்தில் இருந்த ஹர்திக் பாண்டியா சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய முகமது ஷமியும் சிக்ஸர் அடித்த அடுத்த பந்திலேயே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் துருவ் ஜூரெல் 2 ரன்களில் விக்கெட்டை இழக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்களை மட்டுமே சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும், ஜோஃப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் 2-1 என்ற கணக்கில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News