பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடப்பாண்டிற்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற்றது. இதில் குரூப் ஏ அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

Advertisement

அதன்படி களமிறங்கிய நேபாள் அணிக்கு  குஷால் புர்டெல் - ஆசிப் ஷேக் இணை யாரும் எதிர்பாரத தொடக்கத்தைக் கொடுத்தனர். அதிலும் இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர்களான முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோரது பந்துவீச்சை துவம்சம் செய்து விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தனர்.

Advertisement

அதன்பின் அதிரடியாக விளையாடிவந்த குஷால் புர்டெல் 3 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 38 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய பிம் ஷார்க்கி, கேப்டன் ரோஹித் பௌடல், குசால் மல்லா ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுபக்கம் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஆசிஃப் ஷேக் தனது 10 ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

இருப்பினும் அவரும் 58 ரன்களுக்கு தனது விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து வந்த குல்சன் ஜாவும் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த திபிந்திர சிங் ஐரி - சோம்பால் கமி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய பந்துவீச்சாளர்களுக்கு ஆட்டம் காட்டினர், பின் ஐரி 25 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கட்ட சோம்பால் கமி 48 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். 

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் சோபிக்க தவறியதால் நேபாள் அணி 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடவுள்ளது. 

இதையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை களமிறங்கினர். முதலில் தடுமாறிய இந்த இணை இரண்டாவது ஓவரிலிருந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அதன்பின் 2.1 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்களை எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது. அதன்பின் தொடர்ந்து நீடித்த மழையால் இப்போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி ஓவர்கள் குறைக்கப்பட்டு, இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்களை இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

Advertisement

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மளமளவென ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். தொடர்ந்து இருவரும் சிறப்பாக செயல்பட இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 10 விக்கெட் வித்தியாசத்தில் நேபாளம் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரோஹித் சர்மா 74 ரன்களையும், ஷுப்மன் கில் 67 ரன்களையும் சேர்த்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி நடப்பாண்டு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News