IND vs NZ, 1st Test: சதத்தை தவறவிட்ட டெவான் கான்வே; வலிமையான முன்னிலையில் நியூசிலாந்து!

Updated: Thu, Oct 17 2024 17:34 IST
Image Source: Google

நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல்நாள் ஆட்டமானது மழையால் முழுவதுமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. அதன்படி இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்கம் கொடுத்தனர். இதில் ரோஹித் சர்மா 2 ரன்னில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான் ஆகியோர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தானர். அவர்களைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் 13 ரன்களில் நடையைக் கட்டிய நிலையில், அடுத்து வந்த கேல் ராகுல், அஸ்வின், ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தனர்.  பின்னர் அணியின் ஒரே நம்பிக்கையாக இருந்த ரிஷப் பந்த்தும் 20 ரன்களுடன் நடையைக் கட்டிய நிலையில், ஜஸ்பிரித் பும்ராவும் ஒரு ரன்னுடன் விக்கெட்டை இழந்தர்.

இறுதியில் ஜோடி சேர்ந்த குல்தீப் யாதவ் - முகமது சிராஜ் இணை ஓரளவுக்கு தாக்குப்பிடித்த நிலையில், குல்தீப் யாதவும் 2 ரன்னில் நடையைக் கட்டினார். இதனால் இந்திய அணி 46 ரன்களை மட்டுமே எடுத்திருந்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது.  நியூசிலாந்து அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய மேட் ஹென்றி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். அதேசமயம் வில்லியம் ஓ ரூர்க் 4 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து நியூசிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியது. 

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டாம் லேதம் மற்றும் டெவான் கான்வே இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் லேதம் 15 ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அதேசமயம் மறுபக்கம் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெவான் கான்வே தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அவருடன் இணைந்த வில் யங்கும் சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினர். இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடியதுடன் மூன்றாவது விக்கெட்டிற்கு 70 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். 

பின்னர் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட வில் யங் 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சதத்தை நெருங்கிய டெவான் கான்வேவும் 11 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 91 ரன்களை எடுத்திருந்த நிலையில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் இணைந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் டேரில் மிட்செல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் அணியின் விக்கெட் இழப்பையும் தடுத்து நிறுத்தினர். அதன்பின் போதிய வெளிச்சமின்மை காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் நியூசிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ரச்சின் ரவீந்திரா 22 ரன்களையும், டேரில் மிட்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றி அசத்தினர். இதனையடுத்து 134 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை