இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் கான்பூரில் நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரஹானே, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 111.1 ஓவர்களில் 345 ரன்கள் எடுத்தது. அறிமுக டெஸ்டில் சிறப்பாக விளையாடி சதமடித்த ஸ்ரேயஸ் ஐயர், 105 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்தின் செளதி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Advertisement

அதன்பின் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாம் லேதம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தார்கள். அக்‌ஷர் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் விலையாடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 234 ரன்கள் எடுத்தது. 

இந்த இன்னிங்ஸிலும் அறிமுக வீரர் ஸ்ரேயஸ் ஐயர் 65 ரன்களும், சஹா ஆட்டமிழக்காமல் 61 ரன்களும் எடுத்தார்கள். இதனால்  நியூசிலாந்து அணி வெற்றி பெற 284 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நியூசிலாந்து அணி 4-ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 4 ரன்கள் எடுத்தது. டாம் லேதம், சோமர்வில் களத்தில் இருந்தார்கள்.

இதையடுத்து இன்றைய 5ஆம் நாளன்று இந்திய அணியின் சுழற்பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சுலபமாக வீழ்ந்துவிடும் எனப் பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தொடக்க வீரர் டாம் லேதமும் நைட்வாட்ச்மேனாகக் களமிறங்கிய சோமர்வில்லும் அபாரமாக விளையாடி, இந்திய அணியின் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். 

பலவகையிலும் இந்தியப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க முயன்றும் தோல்வியே கிடைத்தது. இன்று முதல் 31 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 75 ரன்கள் எடுத்து ஆச்சர்யப்படுத்தியது நியூசிலாந்து அணி. ஒதனால் கடைசி நாளில் உணவு இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 35 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 79 ரன்கள் எடுத்தது. லேதம் 35, சோமர்வில் 36 ரன்களும் எடுத்துக் களத்தில் இருந்தார்கள். 

Advertisement

இதன் காரணமாக 9 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 60 ஓவர்களில் 205 ரன்கள் தேவைப்பட்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தார்கள். 110 பந்துகளை எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்த சோமர்வில், உமேஷ் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

சிறப்பாக விளையாடி வந்த டாம் லேதம் 52 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் வீழ்ந்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹர்பஜன் சிங்கைத் தாண்டிச் சென்று அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 3ஆவது இந்தியப் பந்துவீச்சாளர் என்கிற பெருமையை அஸ்வின் பெற்றார். 

அதைத்தொடர்ந்து டெய்லர் 2 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் வீழ்ந்தார். 5ஆம் நாள் தேநீர் இடைவேளையின்போது நியூசிலாந்து அணி, 63.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். 

Advertisement

பின்னர் 6 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 159 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் கான்பூர் டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை அடைந்தது.

தேநீர் இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி மளமளவென விக்கெட்டுகளை எடுத்தது . ஹென்றி நிகோல்ஸ் 1 ரன்னில் அக்‌ஷர் படேல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 112 பந்துகளை எதிர்கொண்டு 24 ரன்கள் எடுத்த கேப்டன் வில்லியம்சனை வெளியேற்றினார் ஜடேஜா. விக்கெட் கீப்பர் டாம் பிளெண்டல், 2 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

அதைத்தொடர்ந்து வந்த வீரர்களும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்து, விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் கடைசி விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த ரச்சின் ரவீந்திரா - ஆஜாஸ் படேல் இணை நங்கூரம் போல நின்று விளையாடி விக்கெட் இழப்பை தடுத்தனர். 

Advertisement

இதனால் ஐந்தாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை சேர்த்திருந்தாலும், ஒரு விக்கெட்டில் தோல்வியைத் தவிர்த்து போட்டியை டிரா செய்து அசத்தியது. இதில் ரச்சின் ரவீந்திர 91 பந்துகளை எதிர்கொண்டு 18 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியிலிருந்து அணியை மீட்டார். 

இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News