IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி!

Updated: Mon, Sep 11 2023 23:09 IST
IND vs PAK, Asia Cup 2023: குல்தீப் சுழலில் சறுக்கிய பாகிஸ்தான்; இந்தியா அபார வெற்றி! (Image Source: Google)

கொழும்புவிலுள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.

தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.

பாகிஸ்தான் பவுலர்களை ஆட்டம் காணச் செய்த இந்த இணையில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர் அடித்து 100 பந்துகளில் சதத்தை பதிவு செய்து ‘மாஸ்’ காட்டினார் கேஎல்ராகுல். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் சதமடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.

இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து காட்டிய அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இதில் 94 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலியும், 106 பந்துகளில் 111 ரன்களுடன் கேஎல் ராகுலும் களத்தில் இருந்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 10 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 2 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமானும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இது அவருடைய இரண்டாவது 5 விக்கெட் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை