கொழும்புவிலுள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. கேஎல்ராகுல் 19 ரன்களுடனும், விராட் கோலி 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இந்தப் போட்டி இன்று பிற்பகல் 3 மணி அளவில் தொடங்கியது.

Advertisement

தொடக்கம் முதலே ராகுல் - கோலி இணையை பிரிக்க பாகிஸ்தான் பவுலர்கள் முயற்சித்தாலும், பேட்ஸ்மேன்கள் இருவரும் வலுவான கூட்டணி அமைத்து பந்துகளை நாலாபுறமும் வீசியடித்தனர். அதிரடி காட்டிய கே.எல்.ராகுல் 60 பந்துகளில் அரை சதத்தை கடந்து நம்பிக்கையூட்டினார். அவரைத் தொடர்ந்து விராட் கோலி 55 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் தனது 66ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.

Advertisement

பாகிஸ்தான் பவுலர்களை ஆட்டம் காணச் செய்த இந்த இணையில் 2 சிக்ஸர்ஸ், 10 ஃபோர் அடித்து 100 பந்துகளில் சதத்தை பதிவு செய்து ‘மாஸ்’ காட்டினார் கேஎல்ராகுல். காயத்தில் இருந்து மீண்டு வந்த கே.எல்.ராகுல் சதமடித்தது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது. அவரைத் தொடர்ந்து விராட் கோலி 83 பந்துகளில் சதம் விளாசினார். 2 சிக்ஸர்ஸ், 6 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார்.

இதன் மூலம் அதிவேகமாக 13,000 (267 இன்னிங்ஸ்) ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் கோலி. அதேபோல சர்வதேச ஒருநாள் போட்டியில் கோலியின் 47ஆவது சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் இணைந்து காட்டிய அதிரடியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. இதில் 94 பந்துகளில் 122 ரன்களுடன் விராட் கோலியும், 106 பந்துகளில் 111 ரன்களுடன் கேஎல் ராகுலும் களத்தில் இருந்தனர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 9 ரன்களிலும், அடுத்து களமிறங்கிய கேப்டன் பாபர் ஆசாம் 10 ரன்களிலும், முகமது ரிஸ்வான் 2 ரன்களுக்கும் என ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான ஃபகர் ஸமானும் 27 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் களமிறங்கிய அகா சல்மான் மற்றும் இஃப்திகார் அகமது ஆகியோர் தலா 23 ரன்கள் எடுத்த நிலையில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் வீழ்ந்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களாலும் குல்தீப் யாதவின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் விக்கெட்டை இழந்தனர். இப்போட்டியில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இது அவருடைய இரண்டாவது 5 விக்கெட் ஹால் என்பது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

இதனால் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 128 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று சாதனைப் படைத்துள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News