விராட் கோலி, ரோஹித் சர்மா விக்கெட்டை வீழ்த்திய ஷாஹீன் அஃப்ரிடி - வைரல் காணொளி!

Updated: Sat, Sep 02 2023 16:55 IST
Image Source: Google

ஐசிசி 2023 உலக கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியிலேயே நேபாளை அடித்து நொறுக்கி மெகா வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றது. அப்படி அதிரடி வெற்றியை பெற்ற பாகிஸ்தானை செப்டம்பர் 2ஆம் தேதி இலங்கையின் கண்டி நகரில் இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் எதிர்கொண்டது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து துவங்கிய போட்டியில் 2 பவுண்டரிகளை பறக்க விட்ட ரோஹித் சர்மா நல்ல துவக்கத்தை பெற்ற போது அரை மணி நேரத்தில் வந்த மழை போட்டியை நிறுத்தியது. இருப்பினும் சிறிது நேரத்தில் மழை ஒதுங்கிய நிலையில் மீண்டும் துவங்கிய போட்டியில் ஷாஹீன் அஃப்ரிடி வீசிய 5ஆவது ஓவரில் நன்றாக ஸ்விங்காகி வந்த கடைசி பந்தை தவறாக கணித்த ரோஹ்த் சர்மா 11 ரன்களில் கிளீன் போல்ட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதை விட இந்தியாவை காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியையும் தம்முடைய அடுத்த ஓவரின் 3ஆவது பந்தில் இன்சைட் எட்ஜ் முறையில் க்ளீன் போல்ட்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி இந்திய அணி பேட்டிங்கின் 2 முதுகெலும்பு பேட்ஸ்மேன்களையும் உடைத்து பெவிலியனுக்கு அனுப்பி வைத்து பாகிஸ்தானுக்கு அபாரமான துவக்கத்தை பெற்றுக் கொடுத்தார். பின் ஆரம்பத்திலேயே 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்த இந்தியாவை காப்பாற்று முனைப்புடன் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 2 பவுண்டரியை அடித்து நல்ல துவக்கத்தை பெற்றார்.

 

ஆனால் மிரட்டல் வேகத்தில் வீசக்கூடிய ஹரிஷ் ரவூப்க்கு எதிராக தாக்கு பிடிக்க முடியாத அவர் 14 ரன்களில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி சென்றார். குறிப்பாக காயத்திலிருந்து குணமடைந்து எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் நேரடியாக ஆசிய கோப்பையில் அவர் விளையாடக்கூடாது என்று சில முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் முக்கிய வீரர் என்பதால் வாய்ப்பு பெற்று நேரடியாக களமிறங்கிய அவர் ஏமாற்றத்தை கொடுத்தது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதைத்தொடர்ந்து தற்போது ஷுப்மன் கில் மற்றும் இஷான் கிஷான் ஆகியோரும் தட்டுத்தடுமாறி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் இந்திய அணி 11.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்களை மட்டுமே எடுத்துள்ள நிலையில் மழை குறுக்கிட்டுள்ளதால், போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை