IND vs SL, 1st T20I: பயத்தைக் காட்டிய இலங்கை; கடைசி பந்தில் த்ரில் வெற்றிபெற்றது இந்தியா!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனாகா பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்தப் போட்டியின் மூலம் சுப்மன் கில் மற்றும் ஷிவம் மாவி ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர்.
அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷான் மற்றும் சுப்மன் கில் ஆகிய இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிஷான், ஒரு சிக்சர், 2 பவுண்டரிகளை பறக்கவிட்டார். இதையடுத்து அறிமுக போட்டியின் முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய சுப்மன் கில் அடுத்து 3 ரன்கள் கூடுதலாக எடுத்து 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து வந்த மிஸ்டர் 360 டிகிரி என்று சொல்லப்படும் சூர்யகுமார் யாதவ் ஒரு பவுண்டரி அடித்து 7 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். இவர்களைத் தொடர்ந்து வந்த இந்திய அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தன் பங்கிற்கு 27 பந்துகளில் 4 பவுண்டரிகள் உள்பட 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து இஷான் கிஷானும் 29 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 39 ரன்களில் வெளியேறினார். இறுதியாக ஜோடி சேர்ந்த தீபக் கூடா மற்றும் அக்ஷர் படேல் இலங்கை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இருவரும் 36 பந்துகளில் 60 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் கொடுத்தனர். தீபக் கூடா 23 பந்துகளில் 4 சிக்சர்கள், ஒரு பவுண்டரி உள்பட 41 ரன்கள் சேர்த்தார்.
இதே போன்று அக்ஷர் படேல் 20 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகள் உள்பட 31 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க வீரர் பதும் நிஷங்கா ஒரு ரன்னிலும், அவரைத் தொடர்ந்து வந்த தனஞ்செய டி சில்வா 8 ரன்களிலும் அறிமுக வீரரான ஷிவம் மாவியிடம் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து வந்த சரித் அசலங்காவும் 12 ரன்னிலும், பனுகா ராஜபக்ஷா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த குசால் மெண்டிஸும் 28 ரன்களில் விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாட முயற்சித்த வநிந்து ஹசரங்கா 10 பந்துகளில் இரண்டு சிக்சர், ஒரு பவுண்டரி என 21 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் 108 ரன்களுக்கே இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் அவ்வளவு எளிதில் தோல்வியை ஒப்புகொள்ளபோவதில்லை என்ற நோக்குடன் விளையடைய கேப்டன் தசுன் ஷனகா அதிரடியாக விளையாடி அரைசதத்தை நோக்கி சென்ற நிலையில், 27 பந்துகளில் 3 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி 45 ரன்களில் உம்ரான் மாலிக்கிடம் விக்கெட்டை இழந்தார். இதனால் இலங்கை அணியின் தோல்வியும் உறுதியானது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பின்னர் களமிறங்கிய சமீரா கருணரத்னே 19ஆவது ஓவரில் ஒரு சிக்சரை பறக்கவிட, இலங்கை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. கடைசி ஓவரை அக்ஸர் படேல் வீச, ஓவரின் 3ஆவது பந்தை கருணரத்னே சிக்சருக்கு விளாசி ஆட்டத்தின் பரபரப்பை கூட்டினார்.
இறுதியில் கடைசி பந்தில் இலங்கை வெற்றிக்கு 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதனை எதிர்கொண்ட கருணரத்னேவால் ஒரு ரன்னை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 160 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும், உம்ரான் மாலிக், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதன்மூலம் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.