இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானித்தது.
மேலும் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் முகமது சிராஜ், ஆவேஷ் கான், ரவி பிஸ்னோய், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணியின் தனுஷ்கா குணத்திலாகவை முகமது சிராஜ் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டை வீழ்த்தினார்.
அதன்பின் பந்துவீச வந்த ஆவேஷ் கான், பதும் நிஷங்கா, சரித் அசலங்கா ஆகியோரை தனது அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தினார்.
இதையடுத்து ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமல் - தசுன் ஷனகா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பின் சண்டிமல் 25 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் கேப்டன் ஷனகா அதிரடியான ஆட்டத்தை தொடர்ந்தார்.
இதில் தசுன் ஷனகா 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 146 ரன்களைச் சேர்த்தது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த இலங்கை கேப்டன் தசுன் ஷனகா 74 ரன்களை சேர்த்தார். இந்திய அணி தரப்பில் ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.