IND vs SL: இந்தியாவை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்ற இலங்கை!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் பிரித்வி ஷாவுடன் இணைந்த அறிமுக வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
பின்னர் 49 ரன்களில் பிரித்வி ஷா ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனும் 46 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதற்கிடையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது.
அதன்பின் இப்போட்டி 47 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்றது. இதில் சூர்யகுமார் யாதவும் 40 ரன்களில் நடையைக் கட்ட பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
இதனால் 43.1 ஓவர்களிலேயே இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 225 ரன்களை மட்டுமே எடுத்தது. இலங்கை அணி தரப்பில் அகிலா தனஞ்செய, ஜெயவிக்ரமா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அதன்பின் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் மினோத் பானுகா 7 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோ - பானுகா ராஜபக்க்ஷ இணை அபாரமாக விளையாடி இந்திய அணி பந்துவீச்சை துவம்சம் செய்தது.
இதில் இருவரும் அரைசதமடித்து அசத்தினர். பின்னர் 65 ரன்களில் ராஜபக்க்ஷ ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த தனஞ்செய டி சில்வா, சரித் அசலங்கா, தசுன் ஷானகா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அதன்பின் 76 ரன்கள் எடுத்திருந்த அவிஷ்கா ஃபெர்னாண்டோவும் ஆட்டமிழக்க, இலங்கை அணி வெற்றி பெற 64 பந்துகளில் 13 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் இலங்கை அணி 39 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி, 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இதன் மூலம் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்கா ஃபெர்னாண்டோ ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.