INDW vs AUSW, Only Test: 219 ரன்களில் ஆல் அவுட்டான ஆஸி; இந்தியா அதிரடி தொடக்கம்!
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய மகளிர் அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டி இன்று மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு பெத் மூனி - லிட்ச்ஃபீல்ட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் லிட்ச்ஃபீல்ட் ஒரு பந்துகூட சந்திக்காமல் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய எல்லிஸ் பெர்ரியும் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் ஜோடி சேர்ந்த மூனி - தாஹிலா மெக்ராத் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் அரைசதம் கடந்த தாஹிலா மெக்ராத் 50 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தாஹிலா மெக்ராத் 40 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய கேப்டன் அலீசா ஹீலி தனது பங்கிற்கு 4 பவுண்டரி, ஒரு சிக்சர் என 38 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.
பின்னர் களமிறங்கிய சதர்லேண்ட் 16, ஆஷ்லே கார்ட்னர் 11, ஜோனசென் 19, அலானா கிங் 5, லௌரன் 6 ரன்கள் என அடுத்தடுத்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணி 219 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பூஜா வஸ்திரேகர் 4 விக்கெட்டுகளையும், ஸ்நே ரானா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து தங்களது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷஃபாலி வர்மா - ஸ்மிருதி மந்தனா இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டிற்கு பார்ட்னர்ஷிப் முறையில் 90 ரன்களைச் சேர்த்தனர்.
பின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷஃபாலி வர்மா 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதன்மூலம் முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய மகளிர் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 98 ரன்களைச் சேர்த்துள்ளது.
இந்திய அணி தரப்பில் ஸ்மிருதி மந்தனா 43 ரன்களுடனும், ஸ்நே ரானா 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜோனசன் ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். இதையடுத்து 121 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய மகளிர் அணி நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.