இந்திய ஏ அணியை வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்க ஏ!

Updated: Sun, Nov 09 2025 20:45 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள பிசிசிஐ மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் துருவ் ஜூரெல் சதமடித்து அசத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 132 ரன்களைச் சேர்த்து அசத்தினார். அதேசமயம் மற்ற வீரர்கள் சோபிக்க தவற, இந்திய ஏ அணி 255 ரன்களில் ஆல் அவுட்டானது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் டியான் வான் வூரன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி வீரர்களும் தொடக்கம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் கேப்டன் அக்கர்மேன் சதமடித்ததுடன் 134 ரன்களைச் சேர்த்ததை தவிர மற்ற வீரர்கள் சோபிக்க தவறினர். இதனால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 221 ரன்களை மட்டுமேசேர்த்து ஆல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் பிரஷித் கிருஷ்னா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர் 34 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சோபிக்க தவறிய நிலையில், கேப்டன் ரிஷப் பந்த் 65 ரன்களையும், ஹர்ஷ் தூபே 84 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த துருவ் ஜூரெல் 127 ரன்களையும் சேர்த்தனர். இதன் மூலம் இந்திய ஏ அணி இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 382 ரன்களைச் சேர்த்தது. தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் செலே  3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவுக்கு 417 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்களைச் சேர்த்துள்ளது. இதையடுத்து 397 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இன்றையா ஆட்டத்தை தென் ஆப்பிரிக்க ஏ அணி தொடர்ந்தது. 

இதில் அணியின் தொடக்க வீரர்கள் ஜோர்டன் ஹெர்மான், லெசெகோ இருவரும் தங்களின் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 156 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹெர்மன் 13 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 91 ரன்களிலும், லெசெகோ 11 பவுண்டரிகளுடன் 77 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் இணைந்த சுபைர் ஹம்சா - டெம்பா பவுமா இணையும் அபாரமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். இதில் பாவுமா 59 ரன்களிலும், சுபைர் ஹம்சா 77 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் களமிறங்கிய கொன்னர் சிறப்பாக விளையாடி 52 ரன்களையும், டியன் வான் வூரன் 20 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

Also Read: LIVE Cricket Score

இதன் மூலம் தென் ஆப்பிரிக்க ஏ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய ஏ அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது. இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க ஏ அணி 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்து அசத்தியது. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்க ஏ அணி கேப்டன் அக்கர்மேன் ஆட்டநாயகன் விருதையும், துருவ் ஜூரெல் தொடர் நாயகன் விருதையும் வென்றனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை