பும்ராவை அவசரப்பட்டு விளையாட வைத்துவிட்டார்கள் - வாசிம் ஜாஃபர்!

Updated: Fri, Sep 30 2022 19:19 IST
Image Source: Google

டி20 உலக கோப்பைக்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிரமாக தயாராகிவரும் நிலையில், இந்திய அணியின் முன்னணி ஃபாஸ்ட் பவுலர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

காயத்தால் அவதிப்பட்டு வந்த பும்ரா, காயத்திலிருந்து மீண்ட நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களுக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பும்ரா ஆடினார். அந்த தொடரிலும் முதல் போட்டியில் பும்ரா ஆடவில்லை. கடைசி 2 போட்டிகளில் விளையாடினார்.

2ஆவது டி20 போட்டியில் நன்றாக பந்துவீசிய பும்ரா, 3ஆவது போட்டியில் 50 ரன்களை வழங்கியதுடன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. இதையடுத்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான  டி20 தொடர் தொடங்கிய நிலையில், முதல் டி20 போட்டியில் விளையாடத பும்ரா, காயம் காரணமாக அந்த தொடரிலிருந்து மட்டுமல்லாது டி20 உலக கோப்பையிலிருந்தும் விலகினார்.

பும்ரா முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க தொடர் மற்றும் டி20 உலக கோப்பையிலிருந்து விலகி பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ளார். இந்த காயத்திலிருந்து பும்ரா மீள, 6 மாதங்கள் ஆகும் என்று தெரிகிறது. எனவே அவரால் கண்டிப்பாக டி20 உலக கோப்பையில் விளையாட முடியாது. 

இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். ஏற்கனவே ஆல்ரவுண்டர் ஜடேஜா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் ஆடாத நிலையில், பும்ராவும் ஆடாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமையும். இந்நிலையில், பும்ராவை ஆஸ்திரேலிய தொடரில் அவசரப்பட்டு ஆடவைத்தது தான் அவரது காயம் தீவிரமடைய காரணமாக இருக்கலாம் என்று முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள வாசிம் ஜாஃபர், “ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் பும்ராவை அவசரப்பட்டு ஆடவைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். அவருக்கு கூடுதல் அவகாசம் கொடுத்திருந்தால் டி20 உலக கோப்பைக்கு முழுமையாக தயாராகியிருப்பார். அவர்து காயத்தின் தீவிரத்தை அறியாமல் அவசரப்பட்டு ஆஸி.,க்கு எதிரான தொடரில் ஆடவைத்திருக்கிறார்கள் என்பது தனது கருத்து” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை